அடுத்தடுத்து துயரம்: வங்கதேசத்தில் 48 மணிநேரத்தில் மின்னல் தாக்கி 22 பேர் பலி
டாக்கா: வங்கதேசத்தில் 48 மணிநேரத்தில் மின்னல் தாக்கி 22 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கதேசத்தில் பருவமழை காலம் துவங்கிய நிலையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடும் மழையினால் கடந்த வாரம் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமையில் வங்கதேசத்தை புயல் தாக்கியது. கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 22 பேர் பலியாகியுள்ளனர்.
அதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளம் தம்பதி மற்றும் அவர்களின் மகளும் அடக்கம். வங்கதேசத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் மின்னல் தாக்கி பலியாகின்றனர்.
பருவநிலை மாற்றத்தால் இந்த பிரச்சனை தீவிரமடைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மரங்களை வெட்டுவதும் குறிப்பாக மின்னலை தாங்கும் பனை மரங்களை வெட்டுவதும் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.