ஸ்டாலின், ஹிட்லரைப் போலவே செயல்படுகிறார் புதின்: லிதுவேனிய அதிபர் கடும் தாக்கு!
பெர்லின்: ரஷிய அதிபர் புதின், ஸ்டாலின் மற்றும் ஹிட்லரைப் போலவே செயல்படுவதாக லிதுவேனியாவின் அதிபர் கடுமையாக சாடியுள்ளார்.
உக்ரைனின் கிரிமீயாவை ரஷ்யா தம்முடன் இணைத்துக் கொண்டது முதலே மேற்குலக நாடுகளுடன் மோதல் போக்கை அந்நாடு கடைபிடித்து வருகிறது. ரஷ்யாவை ஒட்டிய பால்டிக் பிராந்தியத்தில் நேட்டோ படைகளே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அப்பகுதியிலும் ரஷியா அவ்வப்போது தலையீட்டை காண்பித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லிதுவேனி அமைந்துள்ள பால்டிக் பிராந்தியத்தில் தமது போர் விமானங்களை அனுப்பி வம்புக்கு இழுத்ததது ரஷியா.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஹிலாரி கிளிண்டன், புதினை ஹிட்லர் மற்றும் ஸ்டாலினுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் லிதுவேனியா அதிபர் டாலியாவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி நாட்டில் இருந்து வெளியான ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் நிச்சயமாக, புதினை ஸ்டாலின் மற்றும் ஹிட்லருடன் ஒப்பிடலாம்.. அவரது நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன என்று காட்டமாக கூறியுள்ளார்.
இந்த பேட்டியைத் தொடர்ந்து லிதுவேனியா- ரஷியா இடையேயா உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.