அப்பா, அம்மா சொல்லியும் கேட்காத குழந்தை ஒபாமா சொன்னா மட்டும் கேட்டுடவா போகுது?
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவைப் பார்க்க வந்த ஒரு குழந்தை, தரையில் படுத்து அழுது புரண்டதால், அதை சமாதானப்படுத்த முடியாமல் ஒபாமாவும், அவரது மனைவியும் திகைத்து நின்றனர். அந்தக் குட்டியும் ரொம்ப நேரம் கார்ப்பெட்டில் அடம் பிடித்துப் படுத்துக் கிடந்தது. இதுகுறித்து அவரது தாயார் கூறுகையில், இதெல்லாம் டிரெய்லர்தான். இதை விட அதிகமாக சேட்டை பண்ணுவா என்று கூறுகிறார்.
ஏப்ரல் மாதம் வெள்ளை மாளிகையில் நடந்த டின்னர் நிகழ்ச்சி ஒன்றின்போதுதான் இந்த காமெடிக் கலாட்டா நடந்தது. என்னதான் உலக மகா அதிபராக இருந்தாலும் கூட இந்தக் குட்டிப் பாப்பாவை சமாதானப்படுத்த முடியாமல் ஒபாமா திகைத்தது செம காமெடி. அது சரி அப்பா அம்மா சொன்னா கேக்காத குழந்தை, ஒபாமா சொன்னா மட்டும் கேட்டுடுமா என்ன.
அந்தக் குட்டீஸின் பெயர் கிளாடியா மோசர். வெள்ளை மாளிகைக்கு தனது தாயார் லாரா ரைலியுடன் வந்திருந்தது. விருந்தின்போது அதிபர் ஒபாமா, மிஷல் ஒபாமா ஆகியோர் அங்கு வந்தனர். விருந்துக்கு வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோதுதான் இந்தக் குழந்தை திடீரென அடம் பிடித்து அழ ஆரம்பித்து திடீரென தரையில் படுத்துக் கொண்டது. எழுந்திருக்க மறுத்தும் விட்டது.
உடனே ஒபாமா குழந்தையிடம் பேசிப் பார்த்தார்.. ம்ஹூம். தலையைக் கூட தூக்கவில்லை பாப்பா. தரையில் உட்கார்ந்து குழந்தையைத் தூக்கி சமாதானப்படுத்த ஒபாமாவின் அந்தஸ்தும் இடம் தரவில்லை. இதனால் நின்றபடியே அவரும் பேசிப் பார்த்தார். நகரலையே குட்டிப் பாப்பா!
கடைசியில் ஒன்றும் செய்ய முடியாமல் கையை விரித்து விட்டு சிரித்தார் ஒபாமா. மிஷலும் அதேபோலத்தான். தாயார் லாராவோ இதெல்லாம் அரசியல் வாழ்க்கையில் சகஜமப்பா என்பது போல சிரித்தபடி நின்றிருந்தார் (அவர் வீட்டில் இதுமாதிரி எத்தனை ஸ்டண்டுகளைப் பார்த்திருப்பார்).
இந்தக் காமெடி கலாட்டாவை வெள்ளை மாளிகையைச் சேர்ந்த பீட் சோசா என்பவர் படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
சோபாவில் படுத்துப் புரண்ட குட்டிப் பையன்
வெள்ளை மாளிகையி்ல இதுபோல நடப்பது இது முதல் முறையல்ல. முன்பு இப்படித்தான் உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது மனைவியுடன் ஒபாமாவைப் பார்க்க அவரது அலுவலகம் வந்திருந்தார். அவர்கள் அதிபருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களது மகன் அதிபரின் சோபாவில் ஏறி குதித்து விளையாடி கலாட்டா செய்து கொண்டிருந்தான்.