நோபல் பரிசு பெற்ற சீன நாட்டு இலக்கியவாதி லூ ஜியாபோ மரணம்
நோபல் பரிசு பெற்ற சீன நாட்டு இலக்கியவாதி லூ ஜியாபோ இன்று காலமானார்.
பெய்ஜிங்: நோபல் பரிசு பெற்ற சீன நாட்டு இலக்கியவாதி லூ ஜியாபோ இன்று காலமானார்.அவருக்கு வயது 61. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.
சீனாவின் பிரபல எழுத்தாளர் லியு ஜியாபோ. சீனாவில் அரசுக்கு எதிராக சார்ட்டெர் 8 என்ற நூலை கடந்த 2009-ம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக சீன அரசு அவருக்கு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது.
கடந்த 2010-ம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு அளித்து கவுரவிக்கப்பட்டது. இதனால் சீனாவுக்கும் நோபல் பரிசை அளித்துவரும் நார்வே நாட்டுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனிடையே ஈரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் லியு ஜியாபோ பரோலில் விடுவிக்கப்பட்டார். வெளிநாட்டில் இருந்து சிறப்பு நிபுணர்களை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை சீன அரசு நிராகரித்து விட்டது.
ஷென்யாங் நகரிலுள்ள சீன மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஈரல் புற்றுநோய் முற்றிய கட்டத்தில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த ஜியாபோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவரது ஈரலில் இருந்த புற்றுக்கட்டி உடைந்து இரத்தக்கசிவு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் லியு இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.