அமெரிக்க ராணுவம் அனுப்பிய உயிருள்ள ஆந்த்ராக்ஸ்… 9 ஆய்வுக்கூடங்களில் பரவிய பீதி
நியூயார்க்: அமெரிக்க இராணுவம் உயிருள்ள ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாக்களை அங்குள்ள ஒன்பது ஆய்வுக்கூடங்களுக்கும் தென் கொரியாவிலுள்ள ஒரு ஆய்வுக்கூடத்துக்கும் தவறுதலாக அனுப்பி வைத்துவிட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு ஏற்பட்ட பீதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்க சுற்றுச்சூழலில் நிலவும் நோய் கிருமிகளை கண்டறிந்து தடுக்கும் வகையில் ராணுவ தலைமையகமான பெண்டகனில் பரிசோதனைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கிருந்து அமெரிக்காவின் பிற ஆய்வுக்கூடங்களுக்கு அடிக்கடி நோய்க்கிருமிகளின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஆந்தராக்ஸ் பாக்டீரியா
இதனையடுத்து மேரிலாந்து, டெக்சாஸ், விஸ்கான்சின், கலிபோர்னியா, நியூஜெர்சி உள்ளிட்ட 9 மாகாணங்களுக்கும், தென்கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவக்கூடத்துக்கும் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா தவறுதலாக அனுப்பப்பட்டது.
ஆய்வு கூடங்கள்
இதனை கண்டுபிடித்த மேரிலாந்து ஆய்வுக்கூட நிர்வாகிகள் உடனடியாக இது குறித்து அனைத்து மாகாணங்களுக்கும், தென்கொரியா ராணுவ தளத்துக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.இதைத்தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி சிகிச்சைகள்
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விசாரணையை தொடங்கி உள்ளது. இதற்கிடையே இந்த கிருமியால் டெக்சாஸ், விஸ்கான்சின் மற்றும் டெலவர் மாகாணங்களில் 4 பேர் சிறிதளவு பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவர்களுக்கு தடுப்பூசி மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாக்டீரியா அழிக்கப்பட்டதுடன், அங்கு பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆபத்தற்ற பாக்டீரியாக்கள்
உயிராபத்து நிறைந்த இந்த ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாக்கள் இராணுவத்தின் நுண்ணுயிரிப் போர்க்காலப் பயிற்சிக்கானது தான் என்றும், அதே சமயம் இவை ஆபத்தற்ற செயற்படாத ஒன்று என்று நம்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, இந்த மாதிரிகள் வர்த்தகரீதியில், மிகக்குறைவான உயிரியல் பாதுகாப்பு நடைமுறைகளுடன் வெவ்வேறு இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
பாதிப்பு இல்லையாம்
தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகள், இந்த ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா அனுப்பப்பட்ட விமான நிலையத்தில் 20 பேர் இருந்ததாகவும், அவர்கள் யாருக்கும் இதுவரை எந்தவித உடல்நலக்குறைவு பற்றி தெரியவரவில்லை என்றும் கூறியுள்ளனர். அதேசமயம், இவை அனுப்பப்பட்ட வழியில் எங்காவது ஒரு இடத்தில் தவறு நடந்திருந்தால் கூட அது மிகப்பெரிய உயிர்சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று செய்தியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.