டாக்டர் தொண்டை வலிக்குது.. பெண்ணோட வாயைத் திறந்து பார்த்தா.. ஷாக்காகிப் போன டாக்டர்!
டோக்யோ: ஜப்பானில் பெண் ஒருவர் தொண்டை வலிக்காக சென்ற போது அவரது தொண்டையில் டான்சில்ஸ் பகுதிக்கு கீழ் புழு ஒன்று உயிருடன் இருந்ததை பார்த்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார்.
பொதுவாக நமக்கு எப்போதாவது சளி பிடித்தால் தொண்டையில் ஒரு இதமற்ற சூழல் ஏற்படும். கரகரப்பு, விழுங்குவதில் பிரச்சினை, தொண்டை கட்டுதல், தொண்டை வலி உள்ளிட்டவை ஏற்படும். ஆனால் இந்த சாதாரண ஒரு விஷயம் ஜப்பான் பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சிக்குரிய சம்பவமாக மாறிவிட்டது.
ஆம் உண்மையில்தான். ஜப்பானில் 25 வயது பெண் ஒருவர் தொண்டையில் எரிச்சல் மற்றும் தொடர் வலி காரணமாக மருத்துவரை அணுகினார். தான் ஷாஷிமி என்ற உணவு வகையை உண்ட பிறகிலிருந்தே வலி ஏற்பட்டதாக தெரிவித்தார்.
பச்சை மீன்
சோயா சாஸுடன், வாசாபி பேஸ்ட்டை சேர்த்து பச்சையாக மீனை கடித்து சாப்பிடும் ஒரு வகை ஜப்பான் உணவுதான் ஷாஷிமி. இதையடுத்து மருத்துவரும் அவரது வாயை திறந்து காட்டுமாறு கூறினார். அந்த பெண்ணும் வாயை திறந்து காட்டினார். அப்போது பார்த்த மருத்துவருக்கு ஒரே அதிர்ச்சி.
டான்சில்ஸ்
அவரது தொண்டை பகுதியில் டான்சில்ஸ் எனப்படும் சதை பகுதிக்கு பின்புறத்தில் இடது பக்கம் ஒரு புழு நெளிந்ததை கண்டார். பின்னர் கருவிகளை கொண்டு அந்த புழுவை எடுத்தார். அந்த பெண்ணுக்கு தற்போது ரத்த மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டது. அவை நார்மலாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.
லார்வாக்கள்
அந்த புழு 1.5 இன்ச் இருந்தது. 1 மி.மீட்டர் அகலம் கொண்டது. அந்த புழுவின் டிஎன்ஏ சோதனைக்குள்படுத்தப்பட்டது. அதில் அந்த புழு சூடோடெர்ரனோவா அசாராஸ் புழு என கண்டறியப்பட்டது. இந்த புழுக்கள் சூஷி, ஷாஷிமி உள்ளிட்ட ஜப்பான் உணவுகளில் இருக்கும். அதாவது பச்சையாகவோ அல்லது சமைக்காத கடல்வாழ் மீன்களையோ உட்கொள்ளும் போது இந்த லார்வாக்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
உடல் பாதிப்பு
இதுபோல் ஜப்பான், வட பசிபிக் நாடுகள், தென் அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இதுவரை 700 பேர் பாதிக்கப்பட்டனர். இன்னும் சொல்ல போனால் ஒட்டுண்ணிகள் கொண்ட மீன் மற்றும் கடல்உணவுகளை உட்கொண்டால் அனிசாகியாசிஸ் என்ற ஒரு வகை உடல் பாதிப்பும் ஏற்படும்.
பாராசைட்டிக் நோய்
அதாவது அனிசாகியாசிஸ் என்பது ஒரு வகையான பாராசைட்டிக் நோயாகும். இது ஒரு வகை அனிசாகிட் நெமடோட்ஸ் எனப்படும் புழுக்களால் ஏற்படும் நோய். இந்த வகை புழுக்கள் சமைக்காத உணவுகளை உட்கொள்தல் மூலம் வாயில் சென்று வயிறு அல்லது குடல் பகுதியில் தங்கிவிடும். இதனால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுபோக்கு, மலத்தில் ரத்தம் அல்லது சளி, லேசான காய்ச்சல் ஆகியவை ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.