இங்கிலாந்து போலீசுக்கு கிலி உண்டாக்கிய பூனைக் குட்டி ‘புரூஸ் லீ’
லண்டன்: தவறுதலாக பூனைக் குட்டி ஒன்று அவசர போலீசுக்கு போன் செய்து விட, விபரம் அறியாத போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்த வேடிக்கைச் சம்பவம் ஒன்று லண்டனில் நடந்துள்ளது.
கடந்த வாரம் லண்டனின் வடக்குப்பகுதி போலீசாருக்கு ஒரு அவசர உதவி கோரும் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. ஆனால், மறுமுனையில் இருந்து எந்தவித சத்தமும் வராததால், சந்தேகமடைந்த போலீசார் மீண்டும் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால், அதற்கும் சரியான பதில் கிடைக்காத்தால், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் போலீசார். விபரீதத்தைத் தடுக்கும் நோக்கில் வீட்டிற்கு வெளியே காத்திருந்தத போலீசார் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்குள் இருந்து எவ்வித சத்தமும் வராததால், கதவை உடைத்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
அங்கே, அவர்களுக்கு எதிரே சிறிய அழகிய பூனைக்குட்டி ஒன்று திருதிருவென முழித்தபடி நின்றுள்ளது. கதவு உடைக்கபட்டதால் பயத்தில் நடுங்கிய நிலையில் இருந்த பூனைக்குட்டியை தூக்க ஒரு அதிகாரி முயன்றப்போது அது பீரோவிற்கு பின்னால் சென்றுநின்றுக்கொண்டதாம். வீட்டைத் தீவிரமாகச் சோதனயிட்டதில் சந்தேகப் படும் படியாக அங்கு எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் குழம்பியுள்ளனர்.
அப்போது சரியாக வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார் அந்த வீட்டின் உரிமையாளர் ஜேம்ஸ் காக்செட்ஜ்.. வீட்டின் கதவுகள் உடைக்கப் பட்டு, உள்ளே போலீசார் நிற்பதைக் கண்ட அவருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்னர், போலீசார் அவசர உதவி குறித்து வந்த தொலைபேசி அழைப்பைக் குறித்து கூறியுள்ளனர்.
நடந்த தவறை ஓரளவு யூகித்த ஜேம்ஸ் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அவர் வளர்க்கும் பூனைக்குட்டி ப்ரூஸ் லீ, தொலைபேசி மணி அடித்தால் உடனே குதிக்க துவங்கிவிடுமென்றும் அவ்வாறு தாவி குதிக்கையில் தொலைபேசி மீது விழுந்து அது அவசர போலீஸ் உதவி எண்ணை அழைத்திருக்கலாமென்றும் விளக்கியுள்ளார்.
அதனையடுத்து நிலைமையை புரிந்துக்கொண்ட போலீசார் அங்கிருந்து செல்ல, பூனைக்குட்டி பிரூஸ் லீ இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை என அதன் உரிமையாளர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.