சட்டத்தின் அடிப்படையிலேயே புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தோர் கைது: மலேசியா பிரதமர் மகாதீர்
கோலாலம்பூர்: சட்டத்தின் அடிப்படையில்தான் தமிழீழ விடுத்அலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர யாரையும் பலவீனப்படுத்த அல்ல என மலேசியா பிரதமர் மகாதீர் விளக்கம் அளித்திருக்கிறார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கவும் நிதி திரட்டவும் ஆதரவு தெரிவித்த 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது இது.
இந்நடவடிக்கை குறித்து பிரதமர் மகாதீர் கூறுகையில், இக்கைது நடவடிக்கையானது முழுவதும் போலீசாரால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. சட்டத்தின் அடிப்படையில்தான் நடைபெற்றது.
இதில் அரசு எந்த விதத்திலும் தலையிடவில்லை. எந்த ஒரு தரப்பையும் பலவீனப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் எதுவும் இல்லை என்றார்.
முன்னதாக வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருக்கிறது. அதில் 2 அமைச்சர்கள் போலீசாரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து அமைச்சர் வேதமூர்த்தி கூறுகையில், இப்பிரச்சனையில் உண்மை என்ன என்பது நீதிமன்றத்தில் தெரியவரும் என்றார்.