புலிகளுடன் தொடர்பு- பினாங்கு துணை முதல்வர் ராமசாமியை கைது செய்ய மலேசியா எம்.பி. வலியுறுத்தல்
Recommended Video
கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ள பினாங்கு துணை முதல்வர் ராமசாமியை கைது செய்ய வேண்டும் என மலேசியா எம்.பி. முகம்மது கைருடின் அமான் ரசாலி வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக 2 சட்டசபை உறுப்பினர்கள் உட்பட 7 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட ஜனநாயக செயல் கட்சி எம்.எல்.ஏக்கள் குணசேகரன், சுவாமிநாதன் இருவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என இஸ்கண்டார் புத்ரி எம்பி லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஶ்ரீனிவாசன் கூறுகையில், 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் 2 பேரையும் கைது செய்திருக்க வேண்டியது இல்லை; விசாராணை மட்டுமே நடத்தி இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில் 2 சட்டசபை உறுப்பினர்களை கைது செய்தது சரி என்று பாஸ் எம்.பி. முகம்மது கைருடின் அமான் ரசாலி வரவேற்றுள்ளார். அத்துடன் பினாங்கு துணை முதல்வர் ராமசாமியையும் இதே குற்றச்ச்சாட்டுக்காக கைது செய்ய வேண்டும் என்றும் ரசாலி வலியுறுத்தி இருக்கிறார்.
பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நெருங்கிய நண்பர். மதிமுகவின் பல்வேறு மாநாடுகளில் பங்கேற்க அடிக்கடி தமிழகம் வருகை தந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.