சிங்கள ராணுவ சித்ரவதைகள்- திடுக் தகவல்கள்: ஐநாவில் விவரித்த தமிழ்ச்செல்வன் மனைவி சசிரேகா- வீடியோ
ஜெனிவாவில் விடுதலை புலிகள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் மறைந்த தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா, இலங்கை ராணுவ முகாம்களில் தாம்பட்ட துயர அனுபவங்களைப் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்.
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் தமிழீழ போரில் இறுதிக்கட்டத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா இலங்கை ராணுவத்தால் தாம் பட்ட துயரங்களை பகிர்ந்துகொண்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் மறைந்த தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா இறுதிப்போரில் தாங்கள் பட்ட துயரத்தை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக மே மாதம் 17, 18 தேதிகளில் இறுதிக்கட்டத்தில் என்னனென்ன நடந்தது என்பதையும் முகாம்களில் எப்படி நடத்தப்பட்டார் என்பதையும் அவர் விவரித்தார்.
அந்த விரிவான துயரப் பதிவு....
''என்னை இலங்கை ராணுவம் பிடித்த செய்தி பிபிசி ஊடகத்தில் வந்த காரணத்தால் என்னை எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், என்னை வைத்து தமிழ் மக்களை வதைக்கலாம் என்பதால் என்னை உயிரோடு வைத்திருந்தார்கள்.
என்னை மே மாதம் 16ஆம் தேதி, 2009ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பில் இனம் காண்கிறார்கள். பிறகு என்னையும் என் பிள்ளைகளையும் ரூபன் என்கிற போராளி ஆகியோரை மூன்று மணிநேரம் ஒரிடத்தில் அடைத்து வைத்தனர். பிறகு, தமிழ்செல்வனின் குடும்பத்தார் பிடிபட்டுவிட்டார்கள். அவர்களை என்ன செய்வது என ராணுவ காமண்டருக்குத் தெரிவித்தார்கள். அந்த இடத்தில் நாங்கள் பிடிபடுவ்தற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது போராளியாக இருந்து பிடிபட்டவர்களும், பொதுமக்களும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்புடன் எங்களைப் பார்த்தார்கள். அதனால் தான் நாங்கள் இனம் காணப்பட்டோம்.
போராளி ரூபனின் உதவி!
ஆனால் அந்த இடத்திலும் போராளிகள் சாதுர்யமாக செயல்பட்டு கமாண்டருக்கு எங்களைக் குறித்து தகவல் கூறினர். இல்லாவிட்டால் நாங்களும் இசைப்பிரியாவைப் போல் சிதைக்கப்பட்டிருப்போம். அதன்பிறகு, நான் போராளி ரூபனை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக சில விஷயங்களைச் செய்தார்கள்.
வவுனியா முகாம்
வவுனியாவில் இருந்த ராணுவத்திடமும் வெளியே இருந்த ராணுவத்திடம் ரூபனின் மனைவி என்றே சொல்லுங்கள், தமிழ்செல்வனின் மனைவி என்று சொன்னால் ஆபத்து என்று சொல்லி அனுப்பிவைத்தார்கள். அதன்பிறகு ரூபன் எங்களுடன் சேர்ந்து நிறைய விசாரணைகளை எதிர்கொண்டார். புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியாவுக்கு பேருந்தில் நாங்கள் 11 பேர் ஏற்றப்பட்டோம். ராணுவத்தினர் தான் எங்களை புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியாவுக்கு அழைத்து வந்தனர். அப்போது போராளிகள், எந்த இடத்திலும் நீங்கள் உங்கள் அடையாளத்தை கண்பிக்கும் வகையில் நடந்துகொள்ளாதீர்கள் என அறிவுறுத்தி அனுப்பினார்கள். ஒருமணிநேரத்தில் நாங்கள் வவுனியாவுக்கு வந்தோம்.
சித்தரவதைக் கூடம் ஜோசப் கேம்ப்
அங்கு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்துக்கு அனுப்பிவிட்டு, என்னையும் என் பிள்ளைகளையும் ரூபனையும் மிகக் கொடூரமன சித்தரவதைக் கூடம் என்று சொல்லப்படும் ஜோசப் கேம்ப்புக்கு அழைத்துச் சென்றார்கள். கண்ணைக் கட்டிக்கொண்டு வர வேண்டும் என்று கூறி எனக்கும் ரூபனுக்கு கண்ணைக் கட்டி அந்த இரவு ஜோசப் கேம்புக்கு அழைத்துச் சென்றார்கள். அதன்பிறகு விசாரணை அதிகாரி அறைக்கு எங்களைக் கொண்டு சென்றார்கள். அதன்பிறகு எப்போது வேண்டுமானாலும் விசாரணை அதிகாரி வருவார் எனக் கூறிச் சென்றார்கள். அப்போது என் பிள்ளைகள், 'அம்மா, இந்த கேம்ப் ரொம்ப ஆபத்தான கேம்ப் என்று அப்பா சொல்வாரே. இன்று நாம் அங்கேயே இருக்கிறோமோ' என்று கூறி அழுதனர். அழுது அழுதே என் பிள்ளைகள் உறங்கிவிட்டனர். அப்போது இரவு ஒன்றரை மனிக்கு ஒரு பெண் வந்து, விசாரணை அதிகாரி கூப்பிடுகிறார். நீங்கள் தனியாக வாருங்கள் என கூறினார்.
கண்ணைக் கட்டி....
ஆனால் நான் அவரிடம் நான் என் பிள்ளைகளுக்காகத்தான் இங்கு மாட்டிக்கொண்டு இருக்கிறேன். வந்தால் என் பிள்ளைகளுடன் தான் வருவேன் எனக் கூறி நான்கு வயது குழந்தையை தோளிலும் இன்னொரு குழந்தையை கையிலும் இழுத்துக்கொண்டு போனேன். அப்போது அங்கு கேட்ட அதிரவைக்கும் சத்தங்களும் அழுகுரல்களும் அது சித்தரவதைக் கூடம் என்பதை உறுதிப்படுத்தியது. அது அண்டர்கிரவுண்டாகத்தான் இருக்க வேண்டும். கண்ணைக் கட்டிவிட்டதால் அந்த இடத்தின் அமைப்பு எனக்கு தெரியவில்லை.
சிலையால் அடித்தார்கள்
நான் அறைக்குள் நுழைந்த போது, ஒரு ராணுவக்காரர் கையில் பரதநாட்டிய அரங்கேற்றத்தின் போது கொடுக்கபப்ட்ட பாராட்டு சிலையை கையில் வைத்துக்கொண்டு, உனக்கு கொடுக்கப்பட்ட பாராட்டு சிலைதானே இது என்று கூறி என்னை அந்த சிலையால் அடிக்க ஓங்கினான். நான் அவனிடம் உனக்கு படிக்கத் தெரிந்தால் அதில் யார் பெயர் எழுதியுள்ளது என்று பார் என கூறி அவன் அடிப்பதை கையால் தடுத்தேன்.
தலைவர் பிரபகரன் குறித்து கேள்விகள்
சுற்றுப்புறத்தில் பலவிதமன ஓலக் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்த நிலையில் தான் விசாரணை தொடங்கியது. திரும்பத் திரும்ப என்னிடம் தலைவர் பிரபாகரன் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. நான் எனக்குத் தெரிந்தவற்றைச் சொன்னேன். தெரியாதவற்றை, தெரியாது என்றே சொன்னேன். அவர்கள் எனக்கு எதுவும் தெரியவில்லை என்பதை உணர்ந்த பிறகு, மற்ற மக்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அனுப்பினார்கள்.
மக்களுடன் மக்களாக...
ஆனால் அந்த இடத்திலும் இவர்கள் ஏன் நம்மை சித்தரவைதை செய்யாமல் அனுப்புகிறார்கள்? நம்மை எதற்காவது ஆயுதமாகப் பயன்படுத்தப் போகிறார்களா என்ற குழப்பம் வந்தது. இந்த நிலையில் என்னையும் என் பிள்ளைகளையும் புலனாய்வுத்துறையில் இருந்த போராளி ஒருவரின் தகப்பனையும் சேர்த்து ஒரு ராணுவ வண்டியில் ஏற்றி நான்கு ஆர்மிக்காரர்களுடன் சேர்த்து வவுனியாவுக்கு மக்கள் தங்கியிருந்த இடத்துக்கு அனுப்பினார்கள்.
வெள்ளை வேன்
ஆனால் எநத இடத்தில் நாங்கள் ஜோசப் கேம்புக்கு அழைத்துச் செல்லப்பட்டோம் என்பதற்காக எந்த ஆவணத்தையும் அவர்கள் உருவாக்கவில்லை. வவுனியால் ஒரு தனியிடத்தில் என்னையும், பிள்ளைகளையும் ரூபனையும் ஒரு ஆர்மிக்காரர் பார்வையில் இருக்கும்படி வைத்தார்கள். அப்போது வெள்ளைவேனில் வந்த ஒரு ராணுவ கும்பல் என்னையும் என் குழந்தைகளையும் தாக்க முற்பட்டார்கள். ஆனால், ஆர்மிக்காரர் அவர்களிடம் ஏதோ சொல்ல எங்களை விட்டுவிட்டு சென்றார்கள்.
தமிழ்செல்வனின் மனைவியா?
பிறகு, மக்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அதில் முதலில் ஒருவரிடம் நான் தமிழ்செல்வனின் மனைவி, இது எங்கள் குழந்தைகள் என பதிவு செய்தோம். அவர் எங்களை விட்டுவிடார். அடுத்த பதிவில் இருந்தவரிடம் இதே விவரங்களைக் கூறியபோது, தமிழ்செல்வன் எங்கே என கேட்டார். நான் அவர் 2007ல் இறந்துவிட்டர் என கூறினேன். உடனே அவர்கள் தமிழ்செல்வன் என்ன பிரிவில் இருந்தார் என கேட்டார். அரசியல் பிரிவு என்று சொன்னதும் என்னையும் என் குழந்தைகளையும் சுற்றி எங்கிருந்தோ வந்த 500க்கும் மேற்பட்ட ஆர்மிக்காரர்கள் சூழந்துகொண்டார்கள்.
போராளி தூயவனின் உதவிக்கரம்
அப்போது அந்தக் கூட்டத்தில் எங்கிருந்தோ ஓடிவந்த தூயவன் என்ற போராளி, அக்கா ராணுவ சிப்பாய்கள் முன்பு அழுதுவிடாதீர்கள். அவர்கள் அதை வைத்து உங்களை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் எனக் கூறி, போராடி அங்கிருந்து என்னையும் என் பிள்ளைகளையும் வேறொரு பஸ்ஸில் ஏற்றிவிட்டார். ஏதோ காரணத்துக்காக கமெண்டர் உங்களை எதுவும் செய்யவிடாமல் இருக்க உத்தரவிட்டிருக்கிறார் எனக் கூறினார். பஸ்ஸுக்குள் வந்த பின்பும் என்னால் ஒரு மணிநேரம் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
நிமிர்ந்து நில்லுங்கள்
தூயவன் மீண்டும் மீண்டும், அக்கா நீங்கள் வன்னியில் வாழ்ந்த கலத்தில் எப்படி நிமிர்ந்து வாழ்ந்தீர்களோ அப்படி இப்பவும் இருங்கள். உங்களை எதற்கோ பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ஆகையால் அழாமல், மூளையை பயன்படுத்துங்கள் எனக் கூறி என்னை மக்கள் இருக்கும் இடத்துக்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டார்.
தமிழ்செல்வனின் குடும்பம் உயிரோடு இருக்கக் கூடாது
அங்கிருந்து ராம்நாதன் கேம்ப் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். எங்களை ஒரு டெண்டில் பத்து பேர் இருக்கும் இடத்தில் இருக்கச் சொன்னார்கள். ஆனால் எங்களால் மற்ற மக்களுக்கு துன்பம் வந்துவிடக் கூடாது என நினைத்து பிள்ளைகளை வைத்துக்கொண்டு தனியாகவே இருந்தோம். அந்த சமயத்தில் அங்கு வந்த கமாண்டர் ஒருவர், நீங்கள் இயக்கத்தைச் சார்ந்த குடும்பமா என கேட்க ஆம் என்றேன். பிறகு யாருடைய மனைவி நீ என்றார். நான் தமிழ்செல்வனின் மனைவி என்றதும், உன் புருஷனால் தான் இத்தனையும் நடந்தது. நாங்கள் வன்னியில் இருந்து 50,000 மக்கள் தான் வருவார்கள் என பார்த்தால் இப்போது ஒன்றரை லட்சத்துக்கும் மேல் வந்துள்ளார்கள். இவர்களை வன்னியில் இருக்க வைத்து தமிழீழத்துக்காக போராட வைத்தது உன் புருஷன் தான். இனி தமிழ்ச்செல்வன் குடும்பம் உயிருடன் இருக்கக் கூடாது என்று சொல்லிக் கத்தினான்.
கொல்வதா? வேண்டாமா?
அப்போது இயக்கத்தில் இருந்த போராளி ஒருவர் அங்கிருந்து ஓடி, ராணுவ போலீசைக் கூட்டி வந்தார். அந்த இடத்தில் அந்த போலீஸுக்கும் கமாண்டருக்கும் கால்மணிநேரமாக சண்டை. கமாண்டர் எங்களைக் கொல்ல வேண்டும் என்கிறார். ஆனால், ராணுவ போலீஸோ அவர்களை கொல்வதற்கு இப்போது உத்தரவு இல்லை. அதனால் அனுமதிக்க முடியாது என கூறினார்.
தப்பித்துப் போங்கள்
பிறகு ராணுவ போலீஸ், எங்களை ஓரிடத்தில் வைத்துவிட்டு எங்களுடன் யாரும் பேசக் கூடாது என மக்களிடம் சொல்லிவிட்டுச் சென்றார். அதன்பிறகு நான்கு நாட்கள் அங்கு இருந்த போது யாரையுமே பார்க்கவில்லை. ஒருநாள், போராளி ஒருவர் வந்து நீங்கள் இங்கிருந்து தப்பிப் போய்விடுங்கள். அதற்கு நாங்கள் உதவுகிறோம் என கூறினார். நான் தப்பித்து போய்விட்டால் மக்களுக்கு பிரச்சனை வரும். ஆகையால் போக இயலாது என கூறினேன். இதைக் கவனித்த ஆர்மிக்காரர் வந்து, நீங்கள் தப்பித்து போனாலும் நாங்கள் உங்களைப் பிடித்துவிடுவோம் என எச்சரித்து சென்றார்.
துரோகி கருணா
நாங்கள் கேம்பில் இருந்தவரை மிருகக்காட்சியில் இருக்கும் விலங்குகளைப் பார்த்து செல்வது போல் தான் ராணுவத்தினர் எங்களைப் பார்த்து சென்றனர். அப்போது ஒருநாள் எங்கள் இயக்கத்துக்கு துரோகம் செய்துவிட்டுப் போன கருணா என்னை வந்து பார்த்தார். ஒரு பதினைந்து நிமிடம் தான் பார்த்தார். ஆனால், அது காலம் பூராவும் எனக்கு பழியாக விழும் என நினைக்கவில்லை.
பம்பைமேடு முகாம்
ராமநாதன் முகாமில் நான்கு நாள் இருந்த பிறகு அருணாச்சலம் முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கும் தமிழ்ச்செல்வனின் மனைவி என்று கேள்விப்பட்டவுடன் மக்கள் வந்து என்னை பார்த்தார்கள். பிறகு அங்கிருந்து நான் மாற்றப்பட்டு பெண் போராளிகள் இருந்த பம்பைமேடு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டோம்.
தண்ணீரே இல்லாத பெண்கள் முகாம்
அங்கு ஒரு சின்ன கட்டடத்தில் 500 பேர் அடைக்கபப்ட்டிருந்தோம். ஒருவருக்கு ஒரு பக்கெட் தண்னீர் தான். அதைத்தான் நாள் முழுக்க பயன்படுத்த வேண்டும். 500 பேருக்கு 7 கழிவறைகள் தான் அங்கு இருந்தது. பெண்களுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியம் என யோசித்துப் பாருங்கள்.
குழந்தை இறந்துவிடும்
அங்கு என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. டாக்டர் இறந்துவிடும் என கூறிவிட்டார். அப்போது அங்கிருந்த பெண் போராளிகள், நாங்கள் போராடினோம். எதற்காகவோ எங்களை அடைத்து வைத்துள்ளீர்கள். ஆனால் இந்தக் குழந்தைகள் என்ன செய்தது எனக் கேட்க அங்கிருந்த பெண் ஆர்மிக்காரர் எங்களை அடிக்க வந்தார். அவர் உன் புருஷனால் தான் என் அண்ணன் இறந்தான் என கூறினார். அப்போது அவரிடம் நாங்கள் எங்கள் நிலத்தில் நாங்கள் வாழ்ந்த்துகொள்கிறோம் என தானே போராடினோம். உங்கள் இடத்துக்கு நாங்கள் வந்தோமா எனக் கேட்க அவர் என்ன அடித்தார்.
என் அம்மாவிடம் கடிதம்
என்னை அங்கிருந்து கொழும்பு அனுராதாபுரம் கேம்புக்கு அழைத்து வந்தார்கள். அப்போது தான் தெரியும் நாங்கள் கோத்தபய ராஜபக்ஷேவின் கஸ்டடியில் இருந்தோம் என. என் தாயார் எங்கள் நிலை என்ன என்று கேட்டு மகிந்த ராஜபக்ஷேவுக்கு கடிதம் எழுத, அவர் உங்கள் மகன் பற்றி தெரியாது. உங்கள் மகளை விரைவில் விடுவிக்கிறோம் எனக் கூறி கடிதம் எழுதினார்.
ரூப வாகினி ஊடகத்தில் என் பேட்டி
என் குழந்தைகளை வைத்து என்னை அச்சுறுத்தி ரூப வாகினி என்ற ஊடகம் என்னிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பியது. அந்த பேட்டியை வற்புறுத்தல் காரணமாக சொன்னேன் என்பதை உணர்ந்துகொண்டு நீங்கள் இந்த விஷயத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள்.
இவ்வாறு சசிரேகா கூறினார்.