லைகா மொபைல் நிறுவனத்தின் பிரான்ஸ் அலுவலகத்தில் ரெய்டு... மோசடிப் புகாரில் 19 பேர் கைது!!
லண்டன்: மொபைல் சர்வீஸ் துறையில் சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தியது பிரான்ஸ் போலீஸ்.
இதில் அந்த நிறுவனம் ஏராளமான பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நிறுவனத்தின் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதானவர்களில் லைகா மொபைலின் இயக்குநர்களுள் ஒருவரான் அலெய்ன் ஜோசிமெக்கும் ஒருவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட 19 பேரில், 9 பேர் வரி ஏய்ப்புக்காவும், மீதி 10 பேர் பண மோசடிக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பின் அளவு 13.4 மில்லியன் பவுன்டுகள் என்று கூறப்படுகிறது.
பல்வேறு வழிகளில் பண மோசடி செய்திருப்பதாகவும், சந்தேகத்துக்குரிய நிறுவனங்களிலிருந்து பல நூறு கோடி பவுண்ட் பணம் கோணிப் பைகளில் லண்டன் தபால் நிலையங்கள் மூலம் பரிமாறப்படுவதைக் கண்காணித்துக் கண்டுபிடித்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
லைகா நிறுவனம் பல ஆண்டுகளாகவே சர்ச்சைக்குரிய நிறுவனமாக உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 2.2 மில்லியன் பவுன்டுகள் அன்பளிப்பு தந்த விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.