ட்விட்டரில் வெளியான மண்டேலா இறுதி மரியாதை போட்டோ... கோபத்தில் மக்கள்
கேப் டவுண்: மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடலை ரகசியமாக புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவரது உறவினர் ஒருவர்.
தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (95) ஜோகன்னெஸ்பர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 5ஆம் தேதி நள்ளிரவு மரணம் அடைந்தார். இதையடுத்து உலக தலைவர்கள் அனைவரும் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மண்டேலாவின் இறுதிசடங்கு வருகிற 15-ந்தேதி சொந்த கிராமமான குலுவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக நெல்சன் மண்டேலாவின் உடல் ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பதப்படுத்தப்பட்டது.
அதன்பின்னர் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள யூனியன் கட்டிடத்தில் பொதுமக்கள் இறுதிஅஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அணி அணியாக சென்று மக்கள் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மண்டேலாவின் உடலை ரகசியமாகப் புகைப்படம் எடுத்த அவரது உறவினர் ஒருவர் அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மக்களிடையே இதற்கு கடும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது.
இந்த விஷயத்தில் தென்னாப்பிரிக்க அரசும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.