காலையில் நியூசிலாந்தை உலுக்கி எழுப்பிய நிலநடுக்கம்... ரிக்டரில் 6.4 ஆக பதிவு!
கிற்ஸ்ட்சர்ச்: நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 6.48 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்தின் பெரிய நகரங்களில் கிறிஸ்ட்சர்ச்சும் ஒன்று. அதன் அருகே ஆர்தஸ் பாஸ் என்ற இடத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
அங்கு 6 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறியதாக 30 அதிர்வுகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி எதிர்பார்த்தது போல் 4 மணி நேரம் கழித்து கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிறிஸ்ட் சர்ச் நகரம் கடும் நிலநடுக்கங்களுக்கு ஆளாகி வருகிறது. அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 185 பேர் உயிரிழந்தனர்.
அங்கு இருந்த புராதன சின்னங்கள் அழிந்து விட்டன. பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து நகரமே தரைமட்டமானது. தற்போதுதான் அதை மீண்டும் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்குள் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் சேதம் குறித்த முதற்கட்ட தகவல் ஏதும் இல்லை.
கடந்த 2011 பிப்ரவரியில் நிகழ்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் இது இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என சொல்லப்படுகிறது. 2011 இல் நடந்த நிலநடுக்கத்தில் 185 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.