ஜப்பானின் இன்று காலை நிலநடுக்கம் – ரிக்டரில் 6.6 ஆக பதிவு -சுனாமி எச்சரிக்கை இல்லை
டோக்கியோ: ஜப்பானின் இன்று 6.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டு நேரப்படி அதிகாலை 2.32 மணிக்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள ஜப்பானின் வடகிழக்குப் பகுதியான ஹொக்கைடோ தீவுகளில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்நிலநடுக்கத்தினால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதுமில்லை என்று தெரிய வந்துள்ளது. இத்தீவு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள குரில் தீவுகளுக்கு அருகில் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலநடுக்கத்தின் மையப் புள்ளியானது குரில்ஸ்க் நகரத்தில் இருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் ரஷ்ய பிரதேசத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த நகரமான நியூமரோ, நிலநடுக்க புள்ளியில் இருந்து 291 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
குரில் தீவானது ஜப்பான் மற்றும் ரஷ்யா இரண்டுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது, இப்பகுதி ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது.