நேபாளத்தை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம் - 6.7 ரிக்டராக பதிவானது
காத்மாண்டு: நேபாளத்திலும், வடமாநிலங்களிலும் இன்று பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தினால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
வடமாநிலங்களையும், நேபாளத்தினையும் புரட்டிப் போட்டு பல்லாயிரம் பேரின் உயிரினைக் காவு வாங்கியது நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம். பல்வேறு கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக்கியதுடன் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆப்டர்ஷாக்குகள் ஏற்பட்டு வருகின்றன. மிதமான அளவில் அவை இருந்து வந்த நிலையில் இன்று சக்தி வாய்ந்த ஆப்டர்ஷாக் ஏற்பட்டது.
இந் நில அதிர்வானது நேபாளத்தில் ரிக்டரில் 6.7 அலகுகளாக பதிவானது. இந்நடுக்கமானது நேபாளத்திலிருந்து 17 கிலோமீட்டரில் கோதாரி என்ற இடத்தில் மையம் கொண்டதாக இருந்தது.
மேலும், வடமாநிலங்களான டெல்லி, கவுகாத்தி, பாட்னா, அலகாபாத், கொல்கத்தா, புவனேஷ்வர், பீகார், உத்தர பிரதேசத்திலும் கட்டிடங்கள் அதிர்ந்த காரணத்தினால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். டெல்லி மெட்ரோ ரயில் சேவை மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
பூட்டான் தலைநகர் திம்புவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் அங்கும் பதட்டம் நிலவுகிறது.