மத்திய அமெரிக்காவின் பனாமா நாட்டில் கடும் நிலநடுக்கம்
வாஷிங்டன்: மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியது. அண்டை நாடான மெக்சிகோவில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நிலநடுக்கம் தாக்கிய நிலையில் நில நடுக்க பீதியில் மக்கள் உள்ளனர்.
கடந்த வார இறுதியில் மெக்சிகோ நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 6 அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு பயந்து மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த பீதி அடங்குவதற்குள் அமெரிக்க நேரப்படி இன்று காலை, பனாமா நாட்டில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பனாமா சிட்டியில் இருந்து 132 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் மையம் கொண்டு உருவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவானது.
சக்திவாய்ந்த நில நடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் குலுங்கின, வீட்டுக்குள் இருந்த பொருட்கள் திடீரென கீழே விழுந்தன. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்தனர். இந்த நில நடுக்கம் சில நிமிடங்கள் நீடித்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.