ஜப்பானில் கடும் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ்!
டோக்கியோ: ஜப்பானின் வடக்கு கடலோரப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.
கடற்கரையை சிறிய அளவிலான சுனாமி தாக்கியதாக முன்னதாக செய்திகள் வெளியாகின. இதில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
நிலநடுக்கத்தின் அளவு 6.9 ரிக்டராக பதிவாகியுள்ளது. ஐவேட் பிரிபெக்சர் பகுதியில் 10 சென்டமீட்டர் உயரத்திற்கு சுனாமி தாக்கியதாக உள்ளூர் மீனவர்கள் கூறுகிறார்கள். இந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இருப்பினும் சுனாமி எச்சரிக்கைச் செய்தி திரும்பப் பெறப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக கடலில் அலைகள் உயரமாக இருக்கும். அதேசமயம், இதனால் சுனாமி வர வாய்ப்பில்லை என்று வானிலை மையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஐவேட் பகுதியில் கிட்டத்தட்ட பத்தரை லட்சம் பேர் வசிக்கிறார்கள். இப்பகுதியில், அணு மின் நிலையம் ஒன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.