பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி பயத்தில் மக்கள்
வெல்லிங்டன்: பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் உள்ள போகைன்வில் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இருக்கும் போகைன்வில் தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சாலமன் தீவுகளுக்கு அருகே ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகியுள்ளது.
போகைன்வில் தீவில் இருக்கும் அராவா பகுதியில் இருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு 154 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் எழக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது சாதாரண விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கம் மிகவும் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் சுனாமி அலைகள் எழ வாய்ப்பு மிகவும் குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.