ஜெருசலேம் எங்களுக்குத்தான் சொந்தம்... டிரம்ப்புக்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பதிலடி
ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபருக்கு பாலஸ்தீன அதிபர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
ஜெருசலேம்: ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் நேற்று வெளியிட்டார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த செயலுக்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கண்டிப்பாக ஜெருசலேம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறியுள்ளார்.
சில நாட்களாக அமைதியாக இருந்த பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை அமெரிக்க அதிபரின் அறிவிப்பால் மீண்டும் பூதாகரமாக மாறியிருக்கிறது.
ஜெருசலேம் ஆக்கிரமிப்பு
ஜெருசலேம் தொடக்கத்தில் முழுமையாக பாலஸ்தீனத்தில்தான் இருந்தது. 1948ல் அரபு-இஸ்ரேல் போர் நடந்தது. அந்த போரில் இஸ்ரேல் ஜெருசலேம் நகரத்தின் மேற்கு பகுதியை கைப்பற்றியது. அந்த பகுதி முழுக்க இஸ்ரேல் மக்களை குடியமர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கியது. அதன்பின் 1967ல் நடந்த அடுத்த போரில் மீண்டும் இஸ்ரேல் கை ஓங்கியது. மீதம் இருந்த ஜெருசலேம் நகரத்தின் கிழக்கு பகுதியையும் கைப்பற்றியது. அதன்பின் ஜெருசலேம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
தலைநகர்
ஜெருசலேம் பகுதி கைப்பற்ற பின்பு அது அந்த நாட்டின் தலைநகராக இல்லை. டெல் அவிவ் என்ற பகுதியே இஸ்ரேலில் தலைநகராக இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். மேலும் இஸ்ரேலின் 'டெல் அவிவ்' என்ற நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரத்திற்கு மாற்றப்பபோவதாகவும் கூறியுள்ளார்.
கடுமையான எதிர்ப்பு
தற்போது அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பிற்கு பாலஸ்தீன் அதிபர் முகமது அப்பாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில் "அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு இஸ்ரேலுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்காது. ஆனால் இது இன்னும் பிரச்சனையைத்தான் உருவாக்கும். இதனால் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் இன்னும் ஆக்கிரமிப்பை அதிகரிக்கும். எங்கள் பகுதியில் பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்றே அதிபர் இப்படி செய்துள்ளார்'' என்று கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார்.
எப்போதும் எங்களுக்குத்தான்
பாலஸ்தீனம் ஜெருசலேம் நகரத்தின் கிழக்கு பகுதிக்கு பல நாட்களாக உரிமை கோரி வருகிறது. இந்த நிலையில் பாலஸ்தீன அதிபர் இதுகுறித்தும் பேசியுள்ளார். அதில் "ஜெருசலேம் எப்போதும் எங்களுக்குத்தான். நாங்கள் எங்களின் உரிமையை நிலைநாட்டுவோம். மீண்டும் ஒருநாள் ஜெருசலேம் எங்களுக்கு தலைநகராக கிடைக்கும்'' என்று கூறியுள்ளார்.