பள்ளி தாக்குதலால் மனம் நொறுங்கி இருக்கிறேன்: மலாலா வேதனை
பெஷாவர்: பாகிஸ்தானில் பள்ளியில் புகுந்து தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 மாணவர்கள் உட்பட 141 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, அந்நாட்டைச் சேர்ந்த இளம் மனித உரிமை ஆர்வலரும், உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்தினர் நடத்தி வரும் பள்ளி ஒன்றில் நேற்று புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் 6 பேர், அங்கிருந்த மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில், அப்பள்ளிக்கூட மாணவர்கள் 132 பேர் உட்பட 141 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உலகையே உலுக்கிய இச்சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனமும், வருத்தமும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் பெண் கல்வியை வலியுறுத்தி தாலிபான்களின் தாக்குதலுக்கு ஆளான பள்ளி மாணவி மலாலா, இக்கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் இளம் மனித உரிமை ஆர்வலரும், சமீபத்தில் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா, கடந்த 2012ம் ஆண்டு தாலிபான்களால் துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு ஆளானவர்.
இவர், பள்ளி மீதான தாலிபன்களின் தாக்குதல், ‘முட்டாள்தனமான மற்றும் இரக்கமற்ற' கொடூரத் தாக்குதல் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :-
இந்த தாக்குதல் சம்பவத்தால் எனது மனம் நொறுங்கி போனது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் நாம் தோல்வியடையக்கூடாது.
இது முற்றிலும் முட்டாள்தனமான செயல். அப்பாவி பள்ளி குழந்தைகளை இதுவரை இப்படி யாரும் பயமுறுத்தியதில்லை. இப்படிப்பட்ட தாக்குதல் சம்பவங்களால் நாம் ஒரு போதும் வீழ்ந்துவிடமாட்டோம். இந்த தருணத்தில் பலியான சகோதர, சகோதரிகளுக்கு உலகம் முழுவதிலும் உள்ள மக்களுடன் சேர்ந்து எனது அஞ்சலியை செலுத்துகின்றேன். இந்த தீவிரவாத செயலை எதிர்த்து போராடும் அரசுக்கும், ராணுவ வீரர்களுக்கும் அனைவரும் ஒருங்கிணைந்து ஆதரவு தரவேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சில தினங்களுக்கு முன் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கியதற்கு பழி தீர்க்கும் விதமாக தான் பெஷாவர் பள்ளியில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.