நோபல் பரிசு விழாவில் மோடி, நவாஸ் ஷெரீப் பங்கேற்க வேண்டும்: மலாலா அழைப்பு
லண்டன்: நோபல் பரிசு பெறும் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்ள வேண்டும் என்று மலாலா யூசுப்சாய் விருப்பம் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான 60 வயது கைலாஷ் சத்யார்த்திக்கும், 17 வயது பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுக்கும் கூட்டாக வழங்குவதாக நேற்று நோபல் பரிசுக் கமிட்டி அறிவித்தது.
இதையடுத்து, லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய மலாலா யூசுப்சாய், ''அமைதிக்கான நோபல் பரிசை நாங்கள் பெறும் போது நவாஸ் ஷெரீப்பும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஒன்றாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். எனது வேண்டுகோள் கேட்கப்பட்டு பரிசீலிக்கப்படும் என நம்புகிறேன்.
மேலும், இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியுடன் நான் பேசினேன். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறுதியான உறவுகள் ஏற்பட இணைந்து முயற்சிப்போம்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்னையில் பதட்டம் நிலவுகிறது. அமைதி, வளர்ச்சி, முன்னேற்றம் உள்ளிட்டவைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்றார்.