விடுதலைப் புலிகளுடன் தொடர்பு: மலேசியாவில் மேலும் 2 பேர் கைது - கைதானோர் எண்ணிக்கை 12
கோலாலம்பூர்: மலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக மலேசியாவின் மாகாண எம்.எல்.ஏக்கள் சாமிநாதன், குணசேகரன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பினாங்கு துணை முதல்வர் ராமசாமி உள்ளிட்ட மேலும் சிலர் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது.
இக்கைது நடவடிக்கைக்கு தாம் அஞ்சப் போவது இல்லை என ராமசாமி கூறியிருந்தார். அதேநேரத்தில் சட்டப்படியாகவே நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என மலேசிய அரசு தெரிவித்தும் வருகிறது.
இந்நிலையில் பினாங்கு, சிலாங்கூரில் மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் ஒருவரும் மாநில அரசின் தகவல் தொடர்பு நிறுவன தலைமை செயல் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே ம.இ.காவின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் மீது அனுதாபம் காட்டுவது எந்த வகையில் தவறாகும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் குலசேகரன் கைது இல்லை
இதனிடையே அமைச்சர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவருடன் அமைச்சர் குலசேகரன் இருக்கும் படம் சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இதையடுத்து குலசேகரன் கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவின.
ஆனால் கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரி அயூப் கான் மைதீன் பிச்சை, இந்த ஒரே ஒரு காரணத்துக்காக அமைச்சரை கைது செய்ய முடியாது என கூறினார்.