எங்கள் ரேடாரில் விமானத்தை பார்த்தோம்: மலேசியாவிடம் இப்போது சொல்லும் தாய்லாந்து
பாங்காக்: மலேசிய விமானம் மாயமான சிறிது நேரத்தில் தங்கள் நாட்டு ராணுவ ரேடாரில் ஒரு விமானம் பதிவாகியுள்ளதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனாவுக்கு கிளம்பிய விமானம் என்ன ஆனது என்று இதுவரை உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. விமானம் ஒன்றி எரிந்து தரை நோக்கி வந்ததை தான் பார்த்தாக தென் சீன கடல் பகுதியில் எண்ணெய் அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து விமானம் மிகவும் தாழ்வாக பறந்ததை தாங்கள் பார்த்ததாக மாலத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மலேசிய விமானம் மாயமான சில நிமிடங்களில் தங்களின் ரேடாரில் ஒரு விமானம் பதிவாகியுள்ளதாக தாய்லாந்து ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது. இந்த தகவலை குறிப்பாக கேட்காததால் அதை மலேசியாவிடம் ஏற்கனவே தெரிவிக்கவில்லை என்று தாய்லாந்து ராணுவம் கூறியுள்ளது.
தங்கள் ரேடாரில் பதிவான விமானம் மலேசிய விமானமாக இருக்கும் என்று தாய்லாந்து அதிகாரிகள் கருதுகின்றனர். தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்தால் தான் விமானத்தை உடனடியாக கவனிப்போம் என்றும், ரேடாரில் பதிவான விமானம் அச்சுறுத்தல் இல்லாததால் கவனிக்கவில்லை என்றும்
தாய்லாந்து விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் வைஸ் மார்ஷல் மான்டோல் தெரிவித்துள்ளார்.