"ஆக்லாந்து விமானம் பாதை மாறிச் சென்றது உண்மைதான்”- உறுதிபடுத்திய மலேசியா ஏர்லைன்ஸ்
கோலாலம்பூர்: மலேசியாவிற்கு கடந்த 25 ஆம் தேதியன்று ஆக்லாந்து நகரில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பாதை மாறி பறந்ததாக வெளியான செய்தியை மலேசியா ஏர்லைன்ஸ் உறுதிபடுத்தியுள்ளது.
எம்எச் 132 என்ற மலேசிய விமானம், கடந்த வெள்ளிக்கிழமை காலை நியூசிலந்தின் ஆக்லாந்து நகரில் இருந்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குச் சென்றுகொண்டிருந்தது.
விமானம் புறப்பட்ட 8வது நிமிடத்தில் தான், விமானம் தவறான பாதையில் செல்வதை விமானி உணர்ந்துள்ளார். வடக்கு பகுதிக்கு பதிலாக ஏன் தெற்கு திசையை நோக்கி செல்ல உத்தரவிடப்பட்டது என்று பைலட் வினவியுள்ளார். கோலாலம்பூர் செல்ல வேண்டிய விமானம், தவறாக மெல்போர்ன் வழித்தடத்திற்கு திரும்பி உள்ளது.
விமானத்தின் பாதை மாறியதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர் விமானத்தை மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, நியூசிலாந்தின் விமான சேவைப் போக்குவரத்து அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. விமானிக்கும், ஆக்லாந்து நகர் ஆகாயக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இரண்டு வெவ்வேறு பாதைகளுக்கான தகவல்கள் வழங்கப்பட்டதை மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது. ஏற்கனவே மலேசிய விமானங்கள் அடிக்கடி மாயமாகி வருகின்ற நிலையில் இச்சம்பவம் பயணிகளிடையே பதட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது.