மலேசியாவில் கொரோனா தாக்குதலுக்கு முதல் முறையாக 2 பேர் பலி- 673 பேருக்கு பாதிப்பு
கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா தொற்று நோய் தாக்குதலுக்கு முதல் முறையாக 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொற்றுநோயால் மொத்தம் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
140 நாடுகளை முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸ் மனித உயிர்களை குடித்து வருகிறது. சீனாவை தொடர்ந்து இத்தாலி, ஈரானில் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் ஒருவர் பலியாகி இருக்கிறார். இதேபோல் மலேசியாவில் கொரோனா தாக்குதலுக்கு முதல் முறையாக 2 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீபெட்டா பள்ளிவாசலில் நடைபெற்ற ஒன்றுகூடலில் பங்கேற்ற 34 வயது ஆண் ஒருவரும் சரவாக் கூச்சிங் தேவாலயத்தைச் சேர்ந்த 60வயது மதபோதகர் ஒருவரும் கொரோனா தாக்கி பலியாகி உள்ளனர். இதனை மலேசியா சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
சரவாக் கிறிஸ்வத மதபோகர், கொரோனாவால் பலியானதால் அந்த தேவாலயத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேசியாவில் புதியதாக இன்று மட்டும் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மொத்தமாக மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673 ஆக அதிகரித்துள்ளது. மலேசியாவில் வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் பங்கேற்பதாலேயே கொரோனா அதிகம் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.