தாய்லாந்தில் கரை ஒதுங்கியது மாயமான மலேசிய விமானத்தின் பாகமா?: மலேசிய அரசு விளக்கம்
கோலாலம்பூர்: தாய்லாந்தில் கரை ஒதுங்கிய விமான பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையது அல்ல என்று மலேசிய அரசு இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்றது. விமானம் கிளம்பிய வேகத்தில் மாயமானது.
விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரம் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு தெரிவித்தது. விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் இரண்டு ஆண்டுகளாக தேடல் பணி நடந்தும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் தாய்லாந்தில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியது. அது மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தாய்லாந்தில் கிடைத்த பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையது அல்ல என்று மலேசிய அரசு இன்று தெரிவித்துள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் அரசு நிபுணர்கள் தாய்லாந்து சென்று அந்த பாகத்தை சோதனை செய்து அது மாயமான விமானத்தினுடையது அல்ல என்று தெரிவித்துள்ளனர்.