மலேசியாவில் விறுவிறுவென நடந்த வாக்குப்பதிவு.. அரியனை யாருக்கு?
மலேசிய பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்று முடிந்தது.
கோலாலம்பூர்: மலேசிய பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்று முடிந்தது.வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மலேசிய பொதுத் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
தலைநகர் கோலாலம்பூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காகவும், 222 நடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 12 மாநில சட்டமன்றங்களுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கும் இந்த தேர்தல் நடைபெற்றது.
கடுமையான போட்டி
இதனிடையே, பிரதான வேட்பாளர்களான முஹமதும், ரசாக்கும் தங்களது வாக்குகளை அடுத்தடுத்து பதிவு செய்தனர். கடந்த 22 ஆண்டுகள் மலேசிய பிரதமராக பதவி வகித்தவரும் எதிர்கட்சி வேட்பாளருமான மஹதீர் முகமதிற்கும், தற்போதைய பிரதமரும் ஆளுங்கட்சி வேட்பாளருமான நஜீப் ரஸாக்கிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
வெற்றி வாய்ப்பு குறைவு
இதை தொடர்ந்து, நஜீப் ரஸாக் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பை முறைப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் இவருக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அரை நூற்றாண்டுக்கும் மேல்
மலேசிய பிரதமர் மீது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால் மலேசியாவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்து வரும் தேசிய முன்னணி கூட்டணிக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
உலகமே உற்றுநோக்கியுள்ளது
இந்நிலையில் இன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் விறுவிறுவென வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் முடிவை மலேசிய மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களும் உற்றுநோக்கியுள்ளனர்.