பத்மாவத் படத்திற்கு மலேசியாவில் தடை: இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில் உள்ளதாக தணிக்கை குழு தகவல்!
மலேசியாவில் பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவில் பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்ய அந்நாட்டு தணிக்கை குழு தடை விதித்துள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடிப்பில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த 24 ஆம் தேதி பத்மாவம் படம் வெளியானது.
வடஇந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் எழுந்த கடும் எதிர்ப்பால் பத்மாவம் படம் அங்கு ரிலீசாகவில்லை.
ரூ.100 கோடி வசூல்
அரியானா, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்த படம் 4 நாட்களில் ரூ.100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ராஜபுத்திர அமைப்புகள்
ராணி பத்மாவதியை தவறாக சித்தரிக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலால் இந்து அமைப்புகள் மற்றும் ராஜபுத்திர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியது. ஆனால் படம் வெளியான பின்பு அதில் ராணி பத்மாவதியோ அல்லது ராஜபுத்திரர்களோ அவமதிக்கப்படவில்லை மாறாக தூக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்தது.
மலேசியாவில் தடை
இதையடுத்து பல இடங்களில் போராட்டங்கள் அப்படியே அடங்கின. இந்நிலையில் பத்மாவத் படத்தை திரையிட மலேசிய அரசு தடைவிதித்துள்ளது.
இஸ்லாமியர்கள் மனதை..
பத்மாவத் திரைப்படம் இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி மலேசிய அரசின் தணிக்கை குழு தடை விதித்துள்ளது. இந்தியாவில் ராஜபுத்திரர்கள் மற்றும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பத்மாவத் படம் உள்ளதாக கூறி ரிலீஸ்க்கு முன்பே போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் மலேசிய அரசு இஸ்லாமியர்களை புண்படுத்துவதாக கூறி தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.