மக்கள் துயர் நீக்கும் பணியில்... மலேசிய இந்துதர்ம மாமன்றம்... தழைத்தோங்கும் மனிதநேயம்
கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் மலேசியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மலேசிய இந்துதர்ம மாமன்றம் சார்பாக ஏழை எளியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
பினாங்கு, கெடா, ஜோகூர் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் 2,426 குடும்பங்களுக்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், ஊரடங்கு முழுமையாக தளர்த்திக்கொள்ளப்படும் வரை மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் உதவிகள் தொடரும் என அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களும், வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களும் வருமானமின்றி அத்தியாவசிய பொருட்களை வாங்க சிரமப்படுகின்றனர். இந்நிலையில் அவ்வாறு துயரத்தில் உள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் மலேசியா இந்துதர்ம மாமன்றத்தினர் நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளை மலேசியாவில் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
அரசு சாரா இயக்கங்கள்
மலேசியா இந்துதர்ம மாமன்ற நிர்வாகிகளால் புராஜெக்ட் மதர் என்னும் தாய்திட்டம் தொடங்கப்பட்டு அதன் மூலம் ஏழை எளியோருக்கு உணவுகள் விநியோகம் செய்யப்பட்டுகின்றன.தன்னார்வலர்களின் உதவியை கொண்டு இந்த திட்டத்தின் மூலம் 17,900 பேருக்கு அவர்கள் இருப்பிடங்களுக்கே சென்று இதுவரை உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பூலோ மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கும் இந்துதர்ம மாமன்ற சார்பாக உணவுகள் விநியோகம் செய்யப்பட்டன.
4-ம் கட்டமாக
மலேசியாவில் 4-ம் கட்டமாக மே 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அதுவரை மலேசியா இந்துதர்ம மாமன்றம் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும், இந்த சேவையில் தங்களுடன் கைகோர்த்திட மலேசியா வாழ் தமிழ்மக்களை வரவேற்பதாகவும் தெரிவிக்கின்றனர் மாமன்ற நிர்வாகிகள். மேலும், நிவாரண உதவிகளை மதமாச்சரியங்களை கடந்து வழங்குவதாக அவர்கள் கூறுகின்றனர்.
பேரிடர் காலம்
இந்த இக்கட்டான பேரிடர் காலத்தில் அரசுக்கு பக்கபலமாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது அரசு சாரா இயக்கங்களின் கடமை என்றும், மக்களின் துயரங்களை அரசால் மட்டும் முழுமையாக நீக்க முடியாது என்பதால் மலேசியா இந்துதர்ம மாமன்றமும் களத்தில் இறங்கியதாக தெரிவிக்கிறார் அதன் தலைவர் ராதாகிருஷ்ணன் அழகுமலை.