மலேசியா: கொரோனாவை கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனம்- நாடாளுமன்றம் நடைபெறாது- எந்த தேர்தலும் இல்லை!
கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடன செய்யப்பட்டுள்ளது. இந்த அவசர நிலை பிரகடனம் ஆகஸ்ட் 1-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்த நிலையில் 2 வார கால லாக்டவுனை பிரதமர் முஹீதின் யாசின் நேற்று அறிவித்திருந்தார். இந்த லாக்டவுன் இன்று நள்ளிரவு முதல் வரும் 26-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி.. முதல்முறையாக இப்படி ஒரு சம்பவம்
மலேசியாவில் அவசர நிலை
இந்நிலையில் மலேசிய பிரதமர் முஹீதின் யாசின் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரையை ஏற்று அந்நாட்டில் அவசர நிலையை மாமன்னர் சுல்தான் அப்துல்லா ஹாஜி அகமட் ஷா பிரகடனப்படுத்தி இருக்கிறார். இந்த அவசர நிலை பிரகடனமானது ஆகஸ்ட் 1-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அவசரநிலை- பிரதமர் விளக்கம்
இந்த அவசர நிலை பிரகடனம் தொடர்பாக அந்நாட்டு மக்களிடம் பிரதமர் முஹீதீன் யாசின் விளக்கம் அளித்து கூறியதாவது: தற்போதைய அவசரநிலை பிரகடனத்தால் கூட்டரசு அரசாங்கம், மாநில அரசாங்க செயல்பாடுகளில் பாதிப்பு இருக்காது. பொருளாதார நடவடிக்கைகளில் இது பாதிப்பை ஏற்படுத்தாது.
நாடாளுமன்றம்- தேர்தல் இல்லை
அவசரநிலை காலத்தில் நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெறாது. பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்கள் நடத்தப்படமாட்டாது. அதேநேரத்தில் நீதிமன்றங்கள் எப்போதும் போல் இயங்கும். அவசர நிலை என்பது ராணுவ அதிகார கட்டுப்பாட்டினை குறிப்பதும் ஆகாது. அவசர நிலை தொடர்பாக மாமன்னருக்கு ஆலோசனை வழங்க எம்.பிக்கள், சுகாதார அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும்.
பொதுத்தேர்தல்
கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் பொதுத்தேர்தல் நடைபெறும். இந்த அவசரநிலை காலங்களில் அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் ஈடுபடவும் கூடாது. இவ்வாறு பிரதமர் முஹீதின் யாசின் தெரிவித்துள்ளார்.