மலேசிய விமானம்: செயல்பாட்டில் சீன பயணியின் செல்போன்… தேடும் செயற்கைகோள்கள்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த சீன பயணியின் செல்போன் செயல்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் காணாமல் போனது.
தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளது.
3 நாட்களாக கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக தேடியும் அந்த விமானத்தையும் அதில் பயணம் செய்தவர்களையும் கண்டுபிடிக்க முடிய வில்லை. காணாமல் போன விமானத்தில் இருந்து உதவி கேட்டு எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை. இதனால், அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உயிரிழந்தார்களா? அல்லது விமானம் கடத்தப்பட்டதா? போன்ற கேள்விகள் அனைவரிடமும் எழுந்துள்ளது.
சீன பயணியின் செல்போன்
இந்நிலையில், காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த ஒரு சீன பயணியின் செல்போன் இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது, மணி ஒலித்துக் கொண்டே இருப்பதாகவும், யாரும் அதை எடுத்து பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
செல்போன் சிக்னல்
அந்த பயணிக்கு டயல் செய்யும் காட்சி பீஜிங் தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது. இதையடுத்து, செல்போன் சிக்னல்களை வைத்து, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று பயணிகளின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
10 செயற்கைக்கோள்கள்
இந்நிலையில், சீனாவின் ஜியான் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையம், காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க 10 உயர்திறன் செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
தேடும் பணி தீவிரம்
இதன்மூலம், விபத்து நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் கடற்பகுதியில் செயற்கைக்கோள்களின் வானிலை கண்காணிப்பு மற்றும் தகவல்தொடர்பு கட்டளைகளை பெற்று தேடுதலை துரிதப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உறவினர்கள் கவலை
விமானத்தில் பயணம் செய்த பயணிகளைப் பற்றி எந்த வித தகவலும் கிடைக்காத காரணத்தால் கடந்த 3 நாட்களாக அவர்களின் உறவினர்கள் கலக்கமடைந்துள்ளனர்.