டேங்கர் கப்பலில் வெளிநாடு தப்ப முயற்சி.. இலங்கையை சேர்ந்த 131 பேர் மலேசியாவில் கைது
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு டேங்கர் கப்பல் மூலம் சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
கோலாலம்பூர்: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு டேங்கர் கப்பல் மூலம் சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போர்ச் சூழல் மற்றும் அரசு அச்சுறுத்தல் காரணமாக பல வருடங்களாக ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு கடல் வழியாக தஞ்சமடைய முயற்சித்து வருகிறார்கள்.சமயங்களில் சிங்களவர்களும் வெளிநாடுகளில் தஞ்சமடைவது அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கடல் வழியாகவே வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து செல்ல முயற்சிப்பவர்களுக்கு மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகியவை இணைப்பு நாடுகளாக இருந்து வருகின்றது.
இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு டேங்கர் கப்பல் மூலம் சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மலேசியா வழியாக செல்ல முயன்ற போது, மலேசிய போலீஸ் இவர்களை கைது செய்தது.
கடந்த மே 1 ஆம் தேதி தஞ்சுங் ஜெமுக் என்ற பகுதியில் இந்த கைது சம்பவம் நடந்ததாக மலேசிய காவற்துறை தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. இந்த 131 பேரில் 98 ஆண்கள், 24 பெண்கள், 4 சிறுவர்கள், 5 சிறுமிகள். ஆனால் இவர்கள் சிங்களவர்களா? ஈழத்தமிழர்களா? என்பது இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை. இக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட எத்ரா என்ற டேங்கர் கப்பலையும் காவற்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல் மக்களை கைமாற்ற பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்றும், அதிலிருந்து 3 இந்தோனேசியர்களும், 4 மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஆட்கடத்தல் கும்பல் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. மலேசிய காவற்துறையின் தலைமை அதிகாரி முகமது பூஸி ஹரூன், "இந்த கைதிகளின் மூலமாக மிகப்பெரிய தந்திரமான ஆட்கடத்தல் கும்பலை வெற்றிக்கரமாக மடக்கி பிடித்திருக்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.