ஓரினச் சேர்க்கை வழக்கு: அப்பீல் மனு தள்ளுபடி - மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வருக்கு மீண்டும் சிறை
கோலாலம்பூர்: மலேசியாவில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரசியல்வாதியும், முன்னாள் துணைப் பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் மேல்முறையீடு மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு பதவியில் இருந்த போது தனக்கு உதவியாளராக இருந்த ஒரு ஆணுடன் அன்வர் இப்ராஹிம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார் என சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அன்வர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பை எதிர்த்து அன்வர் அப்பீல் செய்திருந்தார்.
தனக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக ஆளும் கட்சி செய்த அரசியல் சதி என்று அன்வர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அப்போதைய பிரதமர் மகாதீர் முகம்மது மீதும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். தனது அப்பீல் மனுவிலும் இதையே அவர் காரணமாக கூறியிருந்தார்.
அப்பீல் மனுவை விசாரித்த மலேசிய உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அவரது அப்பீல் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது. மேலும், அன்வர் இப்ராஹிமுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் அது உறுதி செய்துள்ளது. இதனால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அடுத்த தேர்தலில் (2018ம் ஆண்டு) அவர் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அன்வர் இப்ராகிம், தனது இல்லத்தில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் சாப்பிட்டார். அதன் பின்னர் அவரை போலீஸார் சிறைக்கு அழைத்துச் சென்றனர். கோலாலம்பூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுங்காய் புலாக் சிறையில் அவரை அடைத்தனர்.
மலேசியப் பிரதமராக மகாதீர் முகம்மது இருந்தபோது துணைப் பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிரம். அப்போது அவர் பிரபலமடைந்தும் வந்தார். இந்த நிலையில்தான் ஓரினச் சேர்க்கை புகாரில் சிக்கி செல்வாக்கிழந்தார். மேலும் அவர் மீது ஊழல் புகார்களும் எழுந்தன.