மலேசிய அரசியலில் அதிரடி திருப்பம்.. முஹைதீன் யாசின் புதிய பிரதமர்.. அறிவித்தார் மன்னர்
கோலாலம்பூர்: மலேசியா பிரதமர் மகாதீர் முகம்மது பதவி விலகிய நிலையில், முஹைதீன் யாசினை புதிய பிரதமராக அந்நாட்டின் மன்னர் நியமித்துள்ளார்.
மலேசியாவில் கடந்த 2018ல் நடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது (94) தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சி மற்றும் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி கட்சியும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டன.
இந்த கூட்டணி தேர்தலில் அசத்தல் வெற்றி பெற்றது. எனவே மகாதீர் முகமது பிரதமரானார். இதன்மூலம் உலகிலேயே அதிக வயதான பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
பொதுத் தேர்தலுக்கு முன்பே ஒரு முக்கிய அறிவிப்பை மகாதீர் வெளியிட்டார். தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் குறிப்பிட்ட காலம் வரை பிரதமர் பதவியை வகித்துவிட்டு, நாட்டை மீ்ண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்பிவிட்டு, அன்வர் இப்ராஹிமிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பேன் என அவர் கூறியிருந்தார்.
மகாதீர் முகமது பிரதமராக பொறுப்பேற்று மே மாதத்துடன் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் சொன்னபடியே, அவர் ஆட்சி பொறுப்பை இப்ராஹிமிடம் வழங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், ஏபெக் மாநாட்டுக்கு பிறகே பதவி விலக இயலும் என மகாதீர் முகமது கூறினார்.
அடேங்கப்பா.. சென்னை நிறுவனத்தில் ரூ.400 கோடி வருமான வரி மோசடி.. ரகசிய சர்வர் வைத்திருந்தது அம்பலம்
இதையடுத்து கூட்டணியில் பூசல் ஏற்பட்டது. எனவே, அன்வரை புறம்தள்ளிவிட்டு, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மகாதீர் புதிதாக ஆட்சி அமைப்பார் என்றும தகவல் வெளியானது. ஆனால், திடீர் திருப்பமாக பிரதமர் மகாதீர் முகமது, தான் பதவி விலகுவதாக அறிவித்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவுக்கு, அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, மலேசியா மன்னர், முஹைதீன் யாசினை புதிய பிரதமராக நியமித்துள்ளார். முஹைதீனுக்கு பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக நம்புவதாக கூறியுள்ள மன்னர், அவர் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பார் என அறிவித்துள்ளார்.
மகாதீர் முகமது தலைமையேற்றுள்ள பெர்சாத்து கட்சியை 2016ல் தொடங்கியவர்தான் முஹைதீன் யாசின். முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் அம்னோ கட்சி ஆட்சியில் 2009 முதல் 2015 வரை துணை பிரதமராக இருந்தவர் யாசின். ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விமர்சித்ததால் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.