விடுதலைப் புலிகளுடன் தொடர்பு- தமிழ் சினிமா பிரபலத்துக்கு தடை விதிக்கிறதா மலேசியா அரசு?
Recommended Video
கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் தமிழ் சினிமா பிரபலத்துக்கு மலேசிய அரசு தடை விதிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மலேசியாவில் திடீரென தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளனர் எனக் கூறி 2 எம்.எல்.ஏக்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பினாங்கு துணை முதல்வர் ராமசாமியும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஆனால் தாம் தலைமறைவாகவில்லை- கைது செய்தால் அதை எதிர்கொள்ள தயார் என கூறியிருக்கிறார் ராமசாமி. இதனிடையே இக்கைது நடவடிக்கைகள் தொடர்பாக கோலாலம்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.
அச்சந்திப்பில் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலம் ஒருவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறதே என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி அயூப், அந்த சினிமா பிரபலத்துக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதியானால் அவர் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும் எனக் கூறினார்.