மாயமான விமானம்: எஃப்.பி.ஐ. உதவியை நாடிய மலேசிய அரசு
செபாங்: மாயமான விமானத்தின் கேப்டன் ஜஹரி அகமது ஷா வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட கருவியில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்க உதவுமாறு மலேசியா எஃப்.பி.ஐ-இன் உதவியை நாடியுள்ளது.
கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் மாயமானது. இதையடுத்து விமானிகள் மீது சந்தேகம் எழுந்து அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
மாயமான விமானத்தின் கேப்டன் ஜஹரி அகமது ஷா வீட்டில் சோதனை செய்தபோது சிமுலேட்டர் எனப்படும் கருவி கிடைத்தது.
சிமுலேட்டர்?
சிமுலேட்டர் என்றால் விமானத்தை தரையிறக்கி மீண்டும் மேலே பறப்பது தொடர்பான பயிற்சிக்கு உரிய கருவி ஆகும். கேப்டன் ஜஹரி வீட்டில் கிடைத்த கருவியில் இருந்த சில தகவல்கள் கடந்த மாதம் 3ம் தேதி அழிக்கப்பட்டது தெரிய வந்தது.
நிபுணர்கள்
ஜஹரி வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட கருவியில் இருந்து அழிக்கப்பட்ட தகவலை மீட்க நிபுணர்கள் முயற்சி செய்து வருகிறார்கள் என்று மலேசிய ஐ.ஜி. காலித் பின் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
முக்கிய ஆதாரம்
அந்த கருவியில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டுவிட்டால் விமானம் மாயமானது குறித்தும், அதில் விமானியின் பங்கு உள்ளதா என்பது குறித்தும் தெரிந்துவிடும் என்றார் அபுபக்கர்.
எஃப்.பி.ஐ.
ஜஹரியே தயாரித்த அந்த கருவியில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை மீட்க உதவி செய்யுமாறு எஃப்.பி.ஐ.யிடம் மலேசிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.