10,000 அடி உயரத்தில் பறந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்
மாஸ்கோ: 295 பயணிகளுடன் மலேசிய விமானத்தை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரேன் - ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி 295 பயணிகளுடன் சென்ற விமானம் உக்ரைன் நாட்டு வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ‘ராடார்‘ கருவியின் பார்வையில் இருந்து மறைந்தது. சற்று நேரத்தில், விமானம் தீப்பிடித்தபடி வானத்தில் இருந்து நெருப்புக் கோளமாக தரையில் விழுந்தது.
விமானம் விழுந்த இடம் கிழக்கு உக்ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நகருக்கு அருகில் உள்ளது. அந்த பகுதி, கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் பகுதி ஆகும். மேலும், அப்பகுதி ரஷியாவுக்கு அருகே உள்ளது. ரஷிய எல்லைக்குள் நுழைவதற்கு 40 கி.மீ. தூரத்துக்கு முன்பே இச்சம்பவம் நடந்துள்ளது.
அந்த விமானத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் நாட்டு உள்துறை அமைச்சக ஆலோசகர் ஆன்டன் கெராஷ்செங்கோ தெரிவித்தார். தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை உதவியால், விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறினார்.
விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகி விட்டதாக அவர் கூறினார். ஏவுகணையால் தாக்கப்பட்டபோது, விமானம் 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. ஆக்ஸிஜன் மிகக் குறைவாகவும், காற்றழுத்தம் மிகக் குறைவாகவும் இருக்கும் இந்த உயரத்தில், விமானம் வெடித்துச் சிதறிய அடுத்த சில வினாடிகளிலேயே அனைத்துப் பயணிகளும் வானிலேயே பலியாகியிருப்பர்.
விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது.
இதற்கிடையே விமானம் விழுந்த இடத்துக்கு அவசரகால மீட்பு குழுவினர் விரைந்தனர். விமானத்தை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். விமானத்தின் சேத பகுதிகளை உள்ளூர் மக்கள் பார்த்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி உக்ரைன் பிரதமர் எரிசெனி யட்செனிக் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.