உக்ரைனில் எம்.எச் 17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஆதரவு போராளிகள் - விசாரணைக் குழு
வாஷிங்டன்: உக்ரைனின் டோனட்ஸ்க் பகுதியில் 2014ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியாவின் எம்எச் 17 விமானம், ரஷ்ய ஆதரவு புரட்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நெதர்லாந்து நாட்டு விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகையே பதற வைத்த இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 298 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தை சுட்டது ரஷ்ய ராணுவம்தான் என்று உக்ரைன் அரசும், உக்ரைன் ராணுவம்தான் தவறுதலாக சுட்டு விட்டதாக ரஷ்யாவும் அப்போது பரஸ்பரம் குற்றம் சாட்டியிருந்தனர்.
அதேசமயம், விமானம் விழுந்து நொறுங்கிய இடம் ரஷ்ய ஆதரவுப் புரட்சியாளர்கள் வசம் இருந்த உக்ரைன் பகுதி என்பதால் ரஷ்ய ஆதரவு புரட்சியாளர்களே விமானத்தை சுட்டிருக்கலாம என்றும் கூறப்பட்டது. ரஷ்ய ஆதரவுப் புரட்சிப் படையினரும் கூட இதை பின்னர் ஒப்புக் கொண்டனர்.
இந்த நிலையில் இதுகுறித்து விசாரித்து வந்த நெதர்லாந்து நாட்டு விசாரணைக் குழு, ரஷ்ய ஆதரவுப் புரட்சிப் படையினர்தான் விமானத்தை சுட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து சிஎன்என் வெளியிட்டுள்ள செய்தியில், விசாரணைக் குழுவினர் தங்களது அறிக்கையில் ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினரை தரையிலிருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை மூலம் விமானத்தைத் தாக்கித் தகர்த்தனர். அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏவுகணை, அது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது உள்ளிட்ட பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விசாரணைக் குழு கூறியிருப்பதாக சிஎன்என் கூறியுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்ததாகும். வழியில் உக்ரைன் மீது பறந்தபோது இந்த சோகத்தைச் சந்தித்தது.
இந்த சம்பவத்தில் தனக்கும், தனது நாட்டு ராணுவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ரஷ்யா அப்போது திட்டவட்டமாக மறுத்தது. ஆனால் தாக்குதலில் தொடர்புடைய ஏவுகணை ரஷ்யாவிலிருந்துதான் கொண்டு வரப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.