தீவிரவாத வழக்கில் 17 வயது சிறுவனுக்கு 12 ஆண்டுகள் சிறை: மலேசியா கோர்ட் அதிரடி
கோலாலம்பூர்: மலேசியாவில் அரசு கட்டிடங்கள், பொதுபோக்கு இடங்கள் மற்றும் இரவுநேர விடுதிகளை தாக்க திட்டமிட்டதற்காக 17 வயது சிறுவனுக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் 17 வயது சிறுவன் ஒருவர் நான்கு பேருடன் சேர்ந்து அரசு கட்டிடங்கள், பொதுபோக்கு இடங்கள் மற்றும் இரவு நேர விடுதிகளை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டார். அவர்கள் வெடிகுண்டுகள் தயாரிக்க ரசாயனங்களை கலந்து கொண்டிருக்கையில் புகித் அமானை சேர்ந்த தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இன்று சிறுவனுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சிறுவனுக்கு நீதிபதி 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார். மேலும் சிறுவனை சிறார் சீர்திருத்த பள்ளியில் வைக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத செயல்களை மலேசியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. மீறி செய்தால் இது தான் நடக்கும் என பிறருக்கு தெரிவிக்கும் வகையில் சிறுவனுக்கு தண்டனை அளித்துள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
சிறுவனுடன் கைது செய்யப்பட்ட 4 பேரில் இருவருக்கு தலா 25 ஆண்டுகளும், மேலும் 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி கைது செய்யப்பட்டனர்.