நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வி.. மலேசிய இந்திய காங். தலைவர் சுப்பிரமணியம் அரசியலுக்கு முழுக்கு
பொதுத் தேர்தலில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
கோலாலம்பூர்: பொதுத் தேர்தலில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்தியர் காங்கிரஸ் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் அரசியலுக்கு முழுக்கு போட்டுள்ளார்.
மலேசியாவில் ஆளும் கட்சி கூட்டணியில் இந்தியர் காங்கிரஸ் கட்சி நீண்டகாலம் இடம்பெற்றிருந்தது. தற்போதைய இந்தியர் காங்கிரஸ் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம், செகாமட் தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வென்றார்.
இம்முறை டாக்டர் சுப்பிரமணியம் செகாமட் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். இதனைத் தொடர்ந்து டாக்டர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசியலில் தோல்வி அடைந்துவிட்டதாலேயே வாழ்க்கை முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. ஒவ்வொரு முடிவிலும் ஒரு தொடக்கம் இருக்கவே செய்யும்.
இதுவே என்னுடைய கடைசி பதவி காலமாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன். 70 வயதில் அரசியலில் தொடர்ந்து ஈடுபட விரும்பவில்லை. தேர்தல் முடிவுகள் என்னுடைய அரசியல் அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.
இனி பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ மருத்துவர் தொழிலைத் தொடர இருக்கிறேன். இவ்வாறு சுப்பிரமணியம் கூறினார்.