துக்கத்தை வெளிப்படுத்த கருப்பு நிற முதல்பக்கம்- மலேசிய செய்தித்தாள்கள்
கோலாலம்பூர்: மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய செய்தித்தாள்கள் இன்று கருப்பு நிறத்தில் முதல் பக்கத்தை அச்சிட்டு தங்களது துக்கத்தை வெளி்படுத்தியுள்ளன.
மலேசியாவின் மிக முக்கியமான தினசரி பத்திரிக்கையான "ஸ்டார்" இன்று வெளியிட்டுள்ள செய்தித்தாளில் முன்பக்கம் "ஆர்.ஐ.பி எம்ஹெச்370" என்று வெளியிட்டுள்ளது.அதன் பின்புறம் மறைந்த பயணிகளின் பெயர் சிறிய எழுத்துகளில் அச்சிட்டுள்ளது அந்த செய்தி பத்திரிக்கை.
"நியூ ஸ்ரைட் டைம்ஸ்" என்ற செய்தித்தாள் முதல் பக்கம் முழுவதையும் கருப்பு நிறத்தில் அச்சிட்டுள்ளது.மேலும்,அப்பக்கத்தில் "குட் நைட் எம்ஹெச்370" என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.அதுதான் மாயமான மலேசிய விமானத்தில் இருந்து வந்த கடைசி செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.
மலாய் மற்றும் சீன மொழி பத்திரிக்கைகளும் முதல் பக்கத்தை கருப்பு நிற பின்னணியுடன் வெளியிட்டுள்ளன.ஆங்கில பத்திரிக்கையான "சன்" தனது செய்தித்தாளின் பெயரை கருப்பு நிறத்தில் வெளியிட்டுள்ளது.
ஸ்டார் செய்தித்தாள் இதைப்பற்றிய செய்தியில்,"ஒரு நீண்ட நெடிய காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது" என்று கூறியுள்ளது.ஆனால்,இந்த நிமிடம் வரை விமான மாயத்திற்கான தகவலை எந்த ஊடகமும் வெளியிட இயலவில்லை.
"எம்ஹெச்370 விமானத்திற்கான தேடுதல் தொடரும்" என்று மலேசிய அரசு கூறியுள்ளது.
எதிர்கட்சியை சேர்ந்த லிம் கிட் சியாங் தனது டுவிட்டர் பக்கத்தில்,"பயணிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இது மிகவும் வருத்தமான செய்தி. அவர்களுக்கு மட்டும் அல்ல,உலகத்தின் அனைத்து மக்களையும் இச்செய்தி கண்ணீர் மழையில் தள்ளி உள்ளது" என்று கூறியுள்ளார்.