தருண் விஜய் எம்.பி.க்கு திருக்குறள் தூதர் விருது: மலேசியாவில் கௌரவம்
கோலாலம்பூர்: உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி. தருண் விஜய்க்கு மலேசிய எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் திருக்குறள் தூதர் விருது அளிக்கப்பட உள்ளது.
பாஜக எம்.பியான தருண் விஜய் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவர். திருக்குறளை வடஇந்திய பள்ளிகளில் அறிமுகப்படுத்துவது குறித்தும், திருவள்ளுவர் பிறந்த நாளை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்பது குறித்தும் ராஜ்யசபாவில் பேசினார். இதனால் தருண் விஜயை கவுரவிக்கும் வகையில் சென்னையில் வைரமுத்து அவருக்கு பாராட்டு விழா நடத்தினார்.
தருண் விஜய் எம்.பியின் முயற்சியால் திருவள்ளுவரின் பிறந்தநாளை நாடுமுழுவதும் கொண்டாடவேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தருண் விஜய்க்கு மலேசிய எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் திருக்குறள் தூதர் விருதினை அளித்து சிறப்பிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழிசை அறிஞர் சுந்தரேசனார் குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிடும் விழாவுக்கு தருண் விஜய் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளார். அந்த விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் டத்தோ சாமிவேலு, தன் ஸ்ரீகுமரன், டத்தோ சகாதேவன், டத்தோ பிரகதீஷ் குமார், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் கே.கருணாகரன், மலேசிய பல்கலைக்கழக பேராசிரியர் மன்னர் மன்னன் மற்றும் இந்திய தூதர் திருமூர்த்தி ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.