விமான நிறுவனத்தை நடத்த முடியாத முட்டாள்கள் மலேசியர்கள்: முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது
கோலாலம்பூர்: விமான நிறுவனத்தை நிர்வகிக்க முடியாத முட்டாள்கள் மலேசியர்கள் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார்.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டோப் ஆர். முயல்லர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த ஆண்டு பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது கூறுகையில்,
மலேசியர்கள் முட்டாள்கள். அவர்களுக்கு விமான நிறுவனத்தை நிர்வகிக்க தெரியவில்லை. இழப்பு ஏற்பட்ட பிறகு தற்போது அதை சரி செய்ய நினைக்கிறார்கள் என்றார்.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் அரசுக்கு சொந்தமான கசானா நேஷனல் பெர்ஹாதுக்கு 70 சதவீத பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது, உக்ரைனில் எம்.ஹெச்.17 ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது ஆகியவற்றால் அந்நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக 1980களில் லாபத்தில் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை அப்போதைய பிரதமர் மகாதிர் தனியார் மயமாக்கிய பிறகு நஷ்டம் அடைந்து வருகிறது.