மாலத்தீவில் திடீர் அவசர நிலை பிரகடனம்.. 30 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அதிபர் அறிவிப்பு
மாலே: மாலத்தீவில் உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 12 மணி முதல் அடுத்த 30 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் பயணம் செய்த விசைப்படகில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அதிபர் காயமின்றி தப்பினார். ஆனால், அவரது மனைவி உட்பட மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அதிபருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பழைய பாதுகாப்பு அதிகாரிகளையும், அமைச்சர்களையும் பதவியிலிருந்து அகற்றிய யமீன், புதியவர்கள் பலரை நியமித்தார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக துணை அதிபர் அகமது அதீப்பும் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய கபாரை கைது செய்த மாலத்தீவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாலத்தீவு தலைநகர் மாலேவில் அதிபர் மாளிகை அருகே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. தொலை தூரத்தில் இருந்து இயக்கி வெடிக்க வைக்கக் கூடிய அந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்கச் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அதிபர் மாளிகை அருகிலேயே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மாலே நகரம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 12 மணி தொடங்கி அடுத்த 30 நாட்களுக்கு அவசரநிலை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராணுவத்திற்கு அதிக அதிகாரம் வழங்கியும் அதிபர் உத்தரவிட்டுள்ளார். அரசுக்கு எதிராக செயல்படுவர்களைக் கைது செய்யவும் ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவசர நிலையை அதிபர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மறுப்பு:
இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் அப்துல்லா யமீனைப் படுகொலை செய்வதற்காக, அவர் சென்ற படகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.