மாலத்தீவு அதிபர் தேர்தல்: அப்துல்லா யாமீன் தோல்வி.. இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கரம் சேர்த்தவர்
மாலே: மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகமது சாலி வெற்றி பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில், மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் மற்றும் எதிர்கட்சியான, மாலத்தீவு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் இப்ராஹிம் முகமது சாலி நடுவே கடும் போட்டி இருந்தது.
நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்ததுமே வாக்குப்பதிவு துவங்கியது. இதில் இப்ராஹிம் முஹமது சாலி 58.3 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சீனாவுக்கு நெருக்கம்
மொத்தம் 92 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி இருந்தது. இப்ராகிம் முகமது 1,33,808 வாக்குகள் பெற்றார். தற்போது அதிபராக இருக்கும் அப்துல்லா யாமீன் 95,526 பெற்று தோல்வி அடைந்துள்ளார். அப்துல்லா யாமீன் இந்தியாவுக்கு எதிராகவும், சீனாவுக்கு நெருக்கமாகவும் செயல்பட்டவர் ஆகும். மாலத்தீவில் சீனா பல மில்லியன் டாலர் மதிப்புக்கு உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறது. இவ்வாறு அதிகமாக கடனை வாரி வழங்கி மாலத்தீவை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.
சீன ஆதிக்கம்
இந்தியாவின் தென் மேற்கு கடல் பகுதியில் அமைந்துள்ளது மாலத்தீவு. இது கடல் வழி போக்குவரத்து மிக முக்கியமான ஒரு இடம் ஆகும். எனவே இங்கு சீனா ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்காவும் விரும்பவில்லை. ஆனால், அப்துல்லா யாமீன், சீனாவுக்கு ஆதரவு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் சீர்குலைப்பு
முன்னதாக தேர்தலை சீர்குலைக்க அப்துல்லா யாமீன் எவ்வளவோ முயற்சி செய்தார். எதிர்க்கட்சி தலைவர்களை அடக்கி ஒடுக்கினார். தேர்தல் ஆணையத்தில் தலையிட்டார். தேர்தலுக்கு முந்தைய நாள் எதிர்க்கட்சிகளின் அலுவலகங்களுக்கு காவல்துறையினரை அனுப்பி நெருக்கடிக்கு உள்ளாக்கினார். அரசு அலுவலர்களும், அவர்களது குடும்பத்தாரும் தனக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று அவர் நெருக்கடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இவ்வளவுக்கு பிறகும், எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முஹமது சாலி வெற்றி பெற்றுள்ளார்.
கொண்டாட்டம்
அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சுமூகமான முறையில் அதிகார மாற்றத்தை, நிகழ்த்துவதற்கு அப்துல்லா யாமீன் உதவி செய்வார் என்று தான் நம்புவதாக இன்று அளித்த பேட்டி ஒன்றில் இப்ராஹிம் முஹமது சாலி தெரிவித்துள்ளார். இதனிடையே எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மாலத்தீவு முழுக்க கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர்.