கருணாநிதி கைதைப் போல மாலத்தீவில் மிட் நைட் அரெஸ்ட்டுகளை அரங்கேற்றிய அதிபர் யாமின்
மாலத்தீவில் அவசர நிலை பிரகடனத்தைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் கையூம் உள்ளிட்டோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
மாலே: மாலத்தீவின் தலைநகர் மாலேயில் கடந்த சில நாட்களாக நீடித்த பதற்றம் நேற்று பெரும் கொந்தளிப்பானது. அவசர நிலை பிரகடனத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து நள்ளிரவில் முன்னாள் அதிகர் கையூம், தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை மூர்க்கத்தனமான நடவடிக்கைகளால் கைது செய்துள்ளது.
மாலத்தீவின் அதிபராக இருப்பவர் முன்னாள் அதிபர் கையூமின் குடும்பத்தைச் சேர்ந்த யாமின். கையூம் 30 ஆண்டுகாலம் சர்வாதிகார அரசை மாலத்தீவில் நடத்தினார்.
அவரது ஆட்சிக்கு எதிராக மாலத்தீவில் 3 முறை ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பிளாட் எனப்படும் ஈழ விடுதலை இயக்கத்தின் முயற்சியும் அடங்கும்.
எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு
தற்போது கையூமின் குடும்பத்தைச் சேர்ந்த யாமின் அப்துல்லா அதிபராக இருக்கிறார். தமது ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார்கள் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பலரையும் சிறையில் அடைத்துள்ளார் யாமின். முன்னாள் அதிபர் நஷீத் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார்.
அவசர நிலை பிரகடனம்
இந்நிலையில்தான் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மாலத்தீவு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பிக்களுக்கு பதவியைத் திருப்பித் தரவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த யாமின் திடீரென நேற்று அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தினார்.
நீதிபதிகள் அறையில் அடைப்பு
இந்த பிரகடனம் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்நாட்டின் நீதிபதிகளை கைது செய்வதற்காக உச்சநீதிமன்றத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டே உள்ள சென்றது ராணுவம். தலைமை நீதிபதி உள்ளிட்டோரை அறைகளில் பூட்டியது. இதனால் மக்கள் தங்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் முன்பாக அணி திரள தலலமை நீதிபதி நண்பர்கள் வாயிலாக அழைப்பும் விடுத்திருந்தார்.
கையூம் கதறல்
இப்படி ஒரு முற்றுகை நடத்தப்பட்ட போதே முன்னாள் அதிபர் கையூமை ஊழல் குற்றச்சாட்டின் கீழ் எந்த நேரத்திலும் ராணுவம் கைது செய்யும் என கூறப்பட்டது. அதேபோல திடீரென கையூமின் வீட்டைச் சுற்றி பெருமளவு ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். உடனேயே தமது ட்விட்டர் பக்கத்தில் இது என்னை கைது செய்யவா? பாதுகாப்புக்காக எனத் தெரியவில்லை என பதிவிட்டார் கையூம்.
ட்விட்டரில் அக்கப்போர்
பின்னர் நள்ளிரவில் கையூமின் மகள் தமது ட்விட்டர் பக்கத்தில், வீட்டின் பூட்டை உடைத்து தந்தை கையூமையும் கணவர் நஷீத்தையும் கைது செய்துவிட்டனர் என கூறி அதை அமெரிக்கா தூதரகங்களின் ட்விட்டர் அக்கவுண்ட்டுடன் டேக் செய்திருந்தார். கையூமின் மகளின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனாலும் பலர் உங்கள் தந்தை என்னை கைது செய்தார்; என் குடும்பத்தை காரணமின்றி சிறையிலடைத்தார்; உங்களுக்கு இது வேண்டும் என கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
2001-ல் கருணாநிதி கைது
தமிழகத்தில் 2001-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி இப்படித்தான் நள்ளிரவில் கொடூரமான முறையில் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவிலும் இதேபாணியிலான மிட்நைட் அரஸ்ட்டுகள் தொடருவது அந்நாட்டு அரசியல்வாதிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.