நாங்களும் பேச மாட்டோம்... கத்தாருடன் 'கா' விட்ட நாடுகளின் பட்டியலில் இணைந்தது மாலத்தீவுகள்!
வளைகுடா நாடுகளை தொடர்ந்து கத்தாருடனான உறவை முறித்துக்கொள்வதாக மாலத்தீவுகளும் அறிவித்துள்ளது.
மாலே: வளைகுடா நாடுகளை தொடர்ந்து கத்தாருடனான உறவை முறித்துக்கொள்வதாக மாலத்தீவுகளும் அறிவித்துள்ளது. தூதரக உறவை மட்டுமே துண்டித்துக்கொள்வதாக அறிவித்துள்ள மாலத்தீவுகள் வர்த்தக ரீதியிலான உறவுகள் தொடரும் என தெரிவித்துள்ளது.
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவுவது, அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவது என கத்தார் மீது பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட 6 நாடுகள் குற்றம்சாட்டின. தீவிரவாதத்துக்கு துணைப்போகும் கத்தாருடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அறிவித்த அந்நாடுகள் தூதர்களை திருப்பப் பெற்றன.
கத்தாரில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்றும் தங்கள் நாட்டில் உள்ள கத்தார் மக்கள் 2 வாரத்துக்குள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். வான்வழி, கடல்வழி மற்றும் சாலை வழி போக்குவரத்தையும் துண்டித்துள்ளன.
வான்பரப்பை மூடிய வளைகுடா நாடுகள்
சவுதி அரேபியா, பக்ரைன் மற்றும் ஐக்கிய அமீரகங்கள் உள்ளிட்ட நாடுகள் கத்தார் விமானங்களுக்கான தங்களின் வான்பரப்பையும் மூடியுள்ளன.கத்தார் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கத்தாரின் அல் ஜஸீரா உட்பட அனைத்து தொலைக்காட்சி ஒலிபரப்புக்கும் அந்த நாடுகள் தடை வித்துள்ளன.
பஞ்சாயத்து செய்யும் துருக்கி, குவைத்
எனவே இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. குறிப்பாக கத்தார் மீது தூதரக தடை விதித்த ஐந்து அரபு நாடுகள் இடையே சமரசம் ஏற்படுத்த குவைத்தும், துருக்கியும் முயன்று வருகின்றன.
மாலத்தீவும் இணைந்தது
இந்நிலையில், கத்தாருடனான உறவை துண்டித்துக்கொள்வதாக மாலத்தீவுகள் அறிவித்துள்ளது. மாலத்தீவு, கத்தாருக்கு எதிரான முடிவை எடுத்துள்ள போதும் அது கடினமானதாக இல்லாமல் சற்று தளர்வானதாகவே உள்ளது.
வர்த்தக உறவுகள் தொடரும்
கத்தாருடனான தூதரக உறவுகள் மட்டுமே துண்டிக்கப்படும் எனவும், வர்த்தக உறவுகள் தொடரும் எனவும் மாலத்தீவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் கத்தார் மற்றும் அந்த பிராந்தியத்தில் முக்கிய நாடாக விளங்கும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுடனான தனது உறவை சரி சமமாக வைத்துக் கொள்ள மாலத்தீவு விரும்புகிறது.
வான்பரப்பை மூடவில்லை
சவுதி அரேபியா, பக்ரைன் மற்றும் ஐக்கிய அமீரகங்களை போல அல்லாமல் கத்தார் விமானங்களுக்கான தனது வான்பரப்பை மாலத்தீவு மூடவில்லை. மேலும் கத்தார் மக்களை அங்கிருந்து வெளியேறவும் உத்தரவிட இல்லை.
கத்தாரின் முதலீடே காரணம்
மாலத்தீவில் கத்தார் அதிகளவிலான முதலீடுகளை செய்துள்ளதே இதற்கு காரணமாகும். நாள்தோறும் ஒவ்வொரு நாடும் கத்தாருடனான தங்களின் உறவு கதவை மூடுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.