லண்டனில் இந்திய தூதர் நிகழ்ச்சியில் தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையா கலந்து கொண்டதால் சர்ச்சை
லண்டன்: இந்தியாவில் வங்கிகளிடம் கடன் பெற்று திருப்பித் தராமல் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடிய தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையா, அந்நாட்டில் இந்திய தூதர் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ரூ9,000 கோடிக்கு வங்கிகளிடம் கடன்பெற்றவர் விஜய் மல்லையா. ஆனால் வங்கிக் கடன்கள் எதனையும் அவர் திருப்பி செலுத்தவில்லை. வங்கிகள் இக்கடனை திருப்ப செலுத்துமாறு கேட்டபோது இங்கிலாந்துக்கு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார் விஜய் மல்லையா.
சொத்து முடக்கம்
இதையடுத்து அவரது ரூ1,411 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. அமலாக்கப்பிரிவின் இந்நடவடிக்கையை முன்கூட்டியே தெரிந்து கொண்ட விஜய் மல்லையா அவர்களுக்கு தெரியாமலேயே 2 சொத்துகளை இங்கிலாந்தில் இருந்தபடியே விற்பனை செய்துவிட்டார்.
தலைமறைவு குற்றவாளி
இதைத் தொடர்ந்து விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக பிரகடனம் செய்ய அமலாக்கத்துறை கோரியது. இதை ஏற்று அமலாக்கப் பிரிவு நீதிமன்றமும் விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளி என பிரகடனம் செய்தது. அத்துடன் விஜய் மல்லையாவை கைது செய்து நாடு கடத்தவும் இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
திடீரென வந்த மல்லையா
இந்நிலையில் லண்டனில் தொழிலதிபர்கள் தொடர்பான "Mantras for Success: India's Greatest CEOs Tell You How to Win" என்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா பங்கேற்றிருந்தார்.
|
வெளியேறிய தூதர்...
ஆனால் திடீரென விஜய் மல்லையாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விஜய் மல்லையா பங்கேற்றதை நவ்தேஜ் சர்னா விரும்பவில்லை. இதனால் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் அவர் வெளியேறிவிட்டதாக இப்புத்தகத்தை எழுதிய ஷூகேல் ஷேத் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.