காதலியைக் கொன்று சடலத்துடன் செல்பி எடுத்து இணையத்தில் வெளியிட்ட இளைஞர்... சீனாவில்!
பெய்ஜிங்: சீனாவில் இளைஞர் ஒருவர் காதலியைக் கொன்று, அவரது சடலத்துடன் செல்பி எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் செல்பி மோகம் தலை விரித்தாடுகிறது. குழந்தைகள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சமயங்களில் உயிருக்கு எமனாகவே மாறி விடுகிறது செல்பி.
இடம் பொருள் காலநிலை பார்க்காமல் அனைத்து இடங்களிலும் செல்பி எடுப்பவர்களின் ஆதிக்கம் காணப்படுகிறது. சமீபத்தில் இறந்து போன தாத்தாவுடன் சிறுவன் எடுத்துக் கொண்ட செல்பி இணையத்தில் வைரலாக வலம் வந்தது.
இந்நிலையில், சீனாவில் காதலியைக் கொன்று அவரது சடலத்துடன் செல்பி எடுத்து டெரர் காட்டியுள்ளார் இளைஞர் ஒருவர்.
'குன்' என்ற அடை மொழியுடன் பெயர் கொண்ட அந்த இளைஞர், 'லின்' என்ற பெண்ணை உருகி உருகி காதலித்து வந்துள்ளார். காதல் வானில் சிறகடித்துப் பறந்த காதலர்களின் வாழ்க்கையில் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
சம்பவத்தன்று வழக்கம் போல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குன், தனது காதலியைக் கொலை செய்தார்.
அதன் பின்னர், தனது காதலியின் சடலத்துடன் அவர் செல்பியும் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தை இணையத்திலும் அவர் வெளியிட்டார். கூடவே, காதலர்களாக இருந்த போது தாங்கள் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளார் குன்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவரைக் கைது செய்துள்ளனர்.