யு.எஸ். ஏர்போர்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டி விமானத்தை திருட முயன்ற நபர்
டெக்சாஸ்: அமெரிக்காவில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டி விமானத்தை கடத்த முயன்று சிக்கியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வாகோ நகரில் இருக்கும் விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை மதியம் ஒருவர் வந்தார். பாதுகாப்பான பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்ளூர் நிறுவனத்திற்கு சொந்தமான குட்டி விமானத்தின் அருகில் சென்றார்.
அவர் விமானத்தின் டயர் சோக்குகளை அகற்றிவிட்டு விமானத்திற்குள் நுழைய முயன்றார். இதை பார்த்த விமான நிலைய ஊழியர்கள் அந்த வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வாகோ போலீஸ் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த அதிகாரி வந்து அந்த நபரை நெருங்க முயன்றபோது அவர் கட்டையை காட்டி மிரட்டினார். அவர் அதிகாரி கூறியதை கேட்கத் தயாராக இல்லை. இதையடுத்து போலீஸ் அதிகாரி தான் வைத்திருந்த ஸ்டன் கன்னை எடுத்து அவருக்கு பல முறை ஷாக் அளித்தும் பயனில்லை.
ஒரு வழியாக போராடி அந்த நபரை அதிகாரியும், விமான நிலைய ஊழியர்களும் பிடித்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரை போலீசாருக்கு ஏற்கனவே தெரியும். இதையடுத்து அவர் மனநல மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையே இது குறித்து எப்.பி.ஐ. மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.